Thursday 27 February 2014

புத்தக ஆய்வு - "தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் " - சுந்தர ராமசாமி

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்::


அண்மையில் திரு. சுந்தர ராமசாமி எழுதிய “ ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் “ என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது.(காலச்சுவடு பதிப்பகம்)

அந்த புத்தகத்தை பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இதை புத்தக விமர்சனமாக பார்க்கவேண்டாம். யாரும் யாரைப்பற்றியும், குறிப்பாக அவரது எழுத்துக்களை (எழுத்துக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றிய எழுத்தாளனின் சிந்தனைகள்) பற்றி விமர்சிக்கமுடியாது. அது குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாலாம். இது குறித்து திரு. சுந்தர ராமசாமி எழுதியுள்ளதை இங்கு பயன்படுத்திகொள்கிறேன். அவரது எழுத்துக்கள பற்றிய விமர்சனங்கள் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்.

“ படைப்பாளியின் மொத்த எழுத்தைப் பற்றிய உணர்வுகளில் பிடிப்பில்லாமல், சந்தர்ப்பம் சார்ந்த கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு – பல சமயம் அவற்றையும் திரித்து – விமர்சனத்தை முன் வைப்பது இன்று சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது “:

அவருடைய இந்த கருத்து எனக்கும் பொருந்துவதால், அவருடைய இந்த புத்தகத்தை பற்றிய கருத்துக்களை விமர்சனமாக பார்க்காமல், ஒரு வாசகனுடைய கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும்.

முதலில், இந்த புத்தகத்தின் தலைப்பை படிக்கும் போது, “ தடா கைதி “ என்றால் என்ன என்று தோன்றும், இன்றைய வாசகர்களுக்கு – இளைய தலைமுறைக்கு “தடா” என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பில்லை.

தடா என்றால் Terrorist and Disruptive Activities (Prevention) Act - பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். - கன்னட நடிகர் திரு.ராஜ்குமார் கடத்தல் வழக்கு உள்பட பலவழக்குகளில் விசாரணை கைதியாக இருந்த அன்றில் என்கிற தே.ஏழுமலை என்கிற ஒன்பதாம் வகுப்பு வரை படித்த 30 வயது நிரம்பிய ஒரு கைதி. இவருக்கும் எழுத்தாளருக்கும் நடந்த கடித போக்குவரத்தின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

கைதி சுமார் 57 கடிதங்கள் எழுதியுள்ளார். முதல் கடிதம் 14.10.2002 அன்று எழுதப்பட்டுள்ளது. முதல் கடிதம் எழுதும் போது, அவருக்கும் எழுத்தாளருக்கும் எவ்வித பரிச்சயமும் இல்லை. எழுத்தாளரின் ஒரு கட்டுரையால் ஈர்க்கப்பட்டு முதல் கடிதத்தை எழுதியுள்ளார். எழுத்தாளர் பதில் கடிதம் எழுதியதன் விளைவாக கடித உரையாடல் தொடங்கியுள்ளது.

கைதி எழுதிய இரண்டு கடிதமும் , எழுத்தாளர் எழுதிய முப்பத்தி நான்கு கடிதங்களின் தொகுப்பே இந்த புத்தகம்.

இந்த புத்தக வெளீயிட்டிற்க்கு என்ன காரணம். புத்தகத்தின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“ இலக்கிய பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத – கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்த – ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுபவை சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும் தான். அவ்வகையில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே. “

இது நிச்சியமாக இலக்கியதன்மை கொண்டதல்ல. (இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியை யாரும் இங்கு எழுப்ப வேண்டாம் அல்லது உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க நேர்ந்தால் இதில் இலக்கிய தன்மை ஏதுமில்லை என்பதை அறிவீர்கள். எழுத்தாளர், இலக்கியவாதி என்று அங்கீகாரம் பெற்றுள்ளதால், அவர் எழுதிய அனைத்தும் இலக்கியம் என்று கூறப்படுகிறதோ என்னவோ) சாதரணமாக ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதம் போலவே உள்ளது. நலம் நலமறிய அவா அல்லது நீ இங்கு நலம் நான் அங்கு நலமா என்பது போலவே ஆரம்பித்து, வெளியூரில் இருக்கும் மகளுக்கு ஊறுகாய் கொடுத்தனுப்பிய பிறகு அம்மா எழுதும் கடிதத்தில், நான் கொடுத்தனுப்பிய ஊறுகாய் வந்து சேர்ந்த்தா என்று எழுதி கேட்பது போல, நான் அனுப்பிய புத்தகங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்ற பாணியிலேயே எழுதப்பட்டுள்ளது.

: “வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் , சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்” என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது. முன்பின் அறிமுகமில்லாத தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருடன் இரண்டு ஆண்டுகள் கடித போக்குவரத்து வைத்துக்கொள்ள நிச்சியமாக தைரியம் வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக பார்க்கப்பட்ட கால கட்டத்தில், ஒரு கைதியின் மனநிலையை அறிந்து, அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், கைதியை படிக்க தூண்டி, அவரது கருத்துக்களை எதிர்கொண்டதற்க்காகவும்  பாராட்டலாம்.

கைதி எழுதிய கடிதங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டவை என்ற காரணத்தால், இலக்கியம் சார்ந்த, கலைகள் சார்ந்த, வெகுஜன ஊடகங்கள் சார்ந்த பகிர்வுகள் வெளிப்படையாகவும், அரசியல், அதிகாரம் , கொள்கைகள், இயக்கங்கள் சார்ந்த பதிவுகள் கட்டுபாடுகளுடனும் எழுதப்பட்டுள்ளதாக திரு. ராஜமார்த்தாண்டன் தந்து முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கைதி எழுதிய கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டிருப்பதால், எழுத்தாளரும் அவரது கடிதங்களை தானாகவே தணிக்கை செய்துகொண்டு, தமக்கு பிரச்சனை ஏற்படாதவாறு எழுதியுள்ளதாக தோன்றுகிறது.

கைதி எழுதிய கடிதங்கள் இந்த புத்தகத்தில் பிரசுரிக்கப்படவில்லை. அவர் எதை குறித்து எழுதினார் என்பது அறிய முடியவில்லை. அவரது கடிதங்கள் ‘காலச்சுவடு  6 இதழ்களில் வெளியிடப்பட்டதாக பின்குறிப்பு கூறுகிறது. என்னைப்போல இன்றைக்கு இந்த புத்தகங்களை படிப்பவர்கள் , கைதியின் கடிதங்களை படிப்பதற்க்காக 2002-2004 ஆண்டுகளில் வெளிவந்த காலச்சுவடு இதழ்களை தேடிக்கொண்டிருக்கமுடியுமா ?.

கடிதப்போக்குவரத்தின் அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகத்தில், இருவரும் எழுதிய கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாக பிரசுரித்திருந்தால் தான் இருவரது எழுத்துக்களையும், அவைகளின் காரணமாக இருவருக்கும் ஏற்ப்பட்ட தாக்கத்தை அறிய முடியும். ஒருதலை பட்சமாக எழுத்தாளரின் 34 கடிதங்களும் கைதியின் 2 கடிதங்களும் 1 : 17 என்ற விகிதத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதால், கைதியின் எண்ணங்களை, அவர் பல்வேறு விசயங்கள குறித்து எழுதிய கருத்துக்களை அறிய முடியாததால் இப்புத்தகம் முழுமை அடையவில்லை.

கடிதங்கள் இலக்கிய தன்மை கொண்டவையாக இருக்கமுடியுமா ? முடியும் என்கிறது “ஆல்ம்பொழில்” – இது குறித்த கருத்துக்கள் அடுத்த பதிவில்


Tuesday 25 February 2014

ஆலய தரிசனங்கள்



அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், சென்று வந்த கோவிலகளை பற்றிய சிறு குறிப்புகளை எழுதிவிட்டேன்.
1) மதுரை – ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் கோவில்
2) மதுரை – திருபரங்குன்றம் முருகன் கோவில்
3) சமயபுரம் – மாரியம்மன் கோவில்
4) திருச்சி – உச்சி பிள்ளையார் கோவில்
5) ஸ்ரீரங்கம் – ரங்கநாதர் கோவில்
6) தஞ்சாவூர் – பிரகதீஸ்வரர் கோவில்
7) ராமேஸ்வரம் – ராமநாத சுவாமி கோவில்
8) சிதம்பரம் – நடராஜர் கோவில்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் எத்தனை நூற்றாண்டுகளாக நடைப்பெறுகிறது என தெரியவில்லை. ஆனால், அனைத்து மக்களும் ஏதெனும் ஒரு சமயத்தில் கடவுளை பற்றி நினைத்ததுடன், அவருடைய அருள் தமக்கு தேவையென வேண்டியிருப்பார்கள். இதில் மதமோ எந்த கடவுள் என்ற பாகுபாடோ இல்லை.
கடவுள் மறுப்பு என்ற விவாதம் ஏற்ப்பட காரணம் இரண்டு வகையானது.
1. தான் நினைக்கும் விதத்தில் வாழ முடியாத காரணத்தாலும் மற்றும் உலகில் ஏற்ப்பட்டிருக்கும் அத்தனை துன்பங்களை கண்டும் காணமல் இருக்கும் ஒரு சக்தியை , கடவுள் என்று ஒப்புக்கொள்ளும் மனநிலை இல்லாமையும் தான் காரணம்.
2. மேலும் கடவுள் வழிபாடு என்ற செய்கையில் கடைப்பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும், வழிப்பாட்டு தளங்களில் நடக்கும் முறைகேடுகளும் ; மற்றும் என் கடவுள் தான் சிறந்தவர் என்று கூறி பிரச்சனையை உண்டுபண்ணி அமைதியை குலைக்கும் நிலையும்; கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் தனிநபர்களின் செயலும், கடவுளின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்க செய்வதுடன், கடவுள் இல்லையென்று விவாதிக்கவும் வழி ஏற்ப்படுத்துகிறது.
இந்த வித காரணங்களினால் தான் நானும் கடவுள் என்பவர் இருக்கிறாரா என ஐயப்பாடு கொண்டுள்ளேன். மேலும், அப்படி ஒருவர் இருந்தாலும், எனது தேவைகளுக்கு அவரிடம் நான் விண்ணப்பம் அனுப்ப வேண்டியதில்லை. எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் தானாகவே செய்வார்.
மேலும், கண்ணுக்கு புலப்படாத ஒரு உருவத்தை கடவுள் என்று நம்புவதை விட, கண்ணுக்கு தெரியும் ஐம்பெரும் பூதங்களை – நன்மையும் தீமையும் கலந்து செய்யும் இவைகளை , இந்த மாபெரும் சக்திகளை வணங்குவதே சிறப்பானது என்பது என் கருத்து.
மனித அறிவினால் உணரமுடியாத சக்தியே நம்மை எல்லாம் வழிநடத்துகிறது. அதை கடவுள் என்று பெயரிட்டு வணங்குவதால் மக்களுக்கு நன்மை ஏற்ப்படுகிறது என்றால் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. ஆனால், அதற்க்காக மூடநம்பிக்கைகளை கடைப்பிடிப்பதும், மற்றவர்களை காயப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தேவையற்ற செயல்.
நான் கோவில்களுக்கு சென்று வந்த காரணம் கடவுள் நம்பிக்கையினால் அல்ல. எனது மனைவியின் விருப்பத்தின் காரணம். மேலும், பல்வேறு கோவில்களின் தலவரலாறு சிறப்பு தன்மைகளை அறியவும், கட்டிட கலையின் அற்புதத்தை பார்க்கவும், கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளை பார்ப்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை அறியவும் பயன்படுத்திகொண்டேன்.
கோவில்களின் கட்டிட கலை என்னை மிகவும் கவர்ந்தாலும், மக்களின் வழிப்பாட்டு முறையும், அவர்களது நம்பிக்கையும் என்னை கவரவில்லை.
கடவுளை வணங்குபவர்கள் மற்றவர்களை புண்படுத்தாமல் அவர்களது செய்ல்களை செய்தால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

Monday 24 February 2014

ஆலய தரிசனம் - சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், இறுதியாக    (07.02.2014) சென்ற கோவில் சிதம்பரம் நடராஜர் கோயில். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது.
.
நாங்கள் இரவு நேரத்தில் சென்றோம்.  பேருந்து நிலையத்திலோ அல்லது கோவிலுக்கு அருகிலோ பொருட்டகளை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று வரும் வகையில் பாதுகாப்பு பெட்டகங்கள் இல்லாதது பெரிய குறை. ஒரு கடைக்காரர் எங்களது பொருட்களை ஒரு மணி நேரம் வைத்துகொள்வதாகவும், சீக்கிரம் வந்துவிடும்படியும் கூறி பொருட்களை வைத்துக்கொண்டார்.

நாங்கள் கோவிலுக்கு சென்ற போது, தேவியின் ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. வந்த பின்பு தேவிக்கு  தீபாரதனை நடைப்பெற்றது. கூட்டம் அதிகமில்லை. வரிசையில் நின்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மிக அருகிலிருந்து நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. 7 பெரிய பாத்திரங்களில் பிரசாதம் வைத்து பூஜை நடந்தது.

நாங்கள் விரைவாக நடராஜரை தரிசிக்க சென்றோம். நான் நடமாடும் நிலையில் உள்ள சிலை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஒரு சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முகம் மட்டும் தெரிந்தது. தீபாரதனை நடந்தது. இங்கும் கூட்டம் இல்லை.

பின்பு பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசித்தோம். சிவன் ஆலயத்தில் பெருமாள் இருப்பது சிறப்பு.

தேவிக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை பக்கத்தில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஒரு இளம் தீட்சிதர் (TEEN AGE) ஒவ்வொரு பாத்திரத்திலுமிருந்து கரண்டியல் பிரசாதத்தை எடுத்து சுவைத்துகொண்டிருந்தார். அவருக்கு பசியா அல்லது ருசி காரணமாக அப்படி செய்துகொண்டிருந்தாரா என தெரியவில்லை.
பக்தர்களுக்கு வெறும் வெள்ளை சாதம் மட்டும் பிரசாதமாக வழங்கினார்கள்.

நாங்கள் பிரசாத கடையில் வாங்கி சாப்பிட்டோம். நான் பிரசாத கடையில் பிரசாதம் வாங்கும் போது அவரிடம் விசாரித்தேன். நான் இங்கு நடனமாடும் நிலையில் நடராசரை தரிசிக்க வந்தேன். ஆனால், அப்படி ஒரு சந்திதானமும் இல்லையே நான் தவறான சந்நிதானத்துக்கு சென்றுவிட்டேனா அல்லது வேறு சந்நிதானம் உள்ளதா என கேட்டேன். அவர் , அவரது கடையில் இருந்த நாட்காட்டியில் இருந்த நடனமாடும் நடராசரை காட்டி இப்படி பட்ட சிலை தான் உள்ளே உள்ளது என்றும், நான் பார்த்தது சரியான சந்நிதானம் தான் என்றும், அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால், முகம் மட்டுமே தெரிகிறது என்றும்  மற்ற பகுதிகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்து சாப்பிடும் போது, பூஜை செய்த பிரசாதங்கள் தூக்கு சட்டிகளில் தீட்சிதர்கள் எடுத்துகொண்டு  வேகமாக வெளியில் சென்றுகொண்டிருந்தனர்.

பக்தர்கள் யாருக்கும் கொடுக்காமல் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டு போவது அநியாயம். தினமும் இப்படி அவர்களுக்கு தேவையான உணவை பிரசாதம் என்ற பெயரில் சமைத்து, கடவுளுக்கு காட்டிவிட்டு, பக்தர்களுக்கு கொடுக்காமல் எடுத்து செல்வது தவறு. கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை அங்கேயே பக்தர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

இங்கு பூஜை செய்பவர்கள் அர்ச்சகர்களா அல்லது தீட்சிதர்களா ? இவர்கள் முன்குடுமி பக்கவாட்டில் வைத்திருந்தார்கள். ஒரு சிலரே வழக்கம் போல் பின்புறம் குடுமி வைத்திருந்தார்கள்.

சிதம்பர ரகசியம் என்ன என்று பார்க்கமுடியவில்லை. அவசரமாக புறப்பட வேண்டியிருந்ததால், வெளிப்பிரகாரத்தை சுற்றி வரமுடியவில்லை


Saturday 22 February 2014

ஆலய தரிசனம் - தஞ்சை பெரியகோயில்

தஞ்சை பெரியகோயில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், ஐந்தாவதாக   (04.02.2014) சென்ற கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில்  தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.

இதன் பிரமாண்டத்தையும் நிர்மானத்தையும் பற்றி எழுத பலநாட்கள் ஆகும். இது குறித்து நிறைய தகவல்கள் இனையத்தில் உள்ளன. 1000 வருடம் பழைமையான கோயில். 10ஆம் நூற்றண்டில் இராஜராஜ சோழ மன்னனால் 7 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில்  சண்டிகேஸ்வரர் அம்மன்,  சுப்பிரமணியர்,  கணபதி,  மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ்வளாகத்துள் அமைந்துள்ளன.
.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.. பெரிய அளவில் கூட்டம் இல்லை. சில அர்ச்சகர்கள் தீபாரதனை தட்டுடன் இருந்தனர். விபூதி பிரசாதம் அளித்தனர். மற்ற கோயில்களில் உள்ளது போன்ற ஆர்பாட்டம், பண வசூல் வேட்டை ஏதும் கிடையாது.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளத்தான் மற்றும் இராஜராஜன் வாயில்களுக்கு வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றபட்டது.

கோயிலின் சுற்று பிரகாரத்தில் நிறைய சிவலிங்கங்களும் எண்ணற்ற பல தெய்வங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன.

கோயில் இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லை. உல்லாச பயணிகள் ஒரு கலைகூடமாக பார்க்க வந்துள்ளது போல தோன்றியது. உள்ளூர் மக்கள் பெரிவாரியாக தினமும் அல்லது எதெனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வரும் வழக்கம் இல்லை என்று தோன்றுகிறது. மகாசிவராத்திரி அன்றும் பிரதோசம் நாட்களிலும் உள்ளூர் மக்கள் அதிகம் வருவார்கள் என தெரிவித்தனர். இவ்வளவு பெரிய கோயிலில் ஆயிரம் பேர் இருந்தாலும் , ஜனநடமாட்டம் இருப்பது போல் தோன்றாது.

சோழர் கால ஒவியங்களை விளக்கும் மண்டபம் ஒன்று உள்ளது. பெரிய அளவிளான ஒவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை அழிந்த நிலையில் உள்ளன. அவை நகல் ஓவியங்கள் என்றும் , மூல ஓவியங்கள் கோயிலின் மேல் பகுதியிலும் உள்ளதாக பொருப்பாளர் கூறினார்.

கோயிலில் சுவாமி சிலை இருக்கும் மண்டபங்கள் தவிர சுற்றுப்பிரகாரத்தில் மேற்கூரை இல்லாத வெளிபரப்பு அதிகமாக உள்ளது. சுற்றுப்பிரகாரத்தை தூய்மையாக வைத்துள்ளனர். நமது தற்கால இந்திய மரபுப்படி, பொதுமக்கள் தங்கள் பெயரையும் காதலியின் பெயரையும் சுவர்களில் எழுதி வைத்துள்ளனர். இரண்டு காதல் ஜோடிகள் பொழுது போக்கி கொண்டிருந்தன நாங்கள் சென்ற போது, ஒரு வெளிநாட்டு பெண்மணி, கையில் சிறிய காகிதத்தை (பேருந்து சீட்டு அளவு) எங்கே போடுவது என தெரியமால் தவித்துகொண்டிருந்தார். அருகில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் போடலாம என கேட்டு அதில் போட்டார். அவர்கள் தூய்மையை கடைபிடிப்பதில் இருக்கும் கவணத்தில் சிறிதளவு நமக்கு இருந்தால் இந்த கோயில் இன்னமும் தூய்மையாக இருக்கும்.

அடுத்து சரஸ்வதி மகால் நூலகத்தை பார்பது என்று அங்கு சென்றோம். பழைய கட்டிடம். அங்கு பழைய ஓலை சுவடிகள்சிறியது, பெரியது, நீளமானது, சுருட்ட கூடியது ஆகியவனவையும், ஓலைச்சுவடிகள் எடுத்து செல்லும் தோல் பை, ஓலைச்சுவடியில் எழுதிய ராமயணம், மகாபாரதம் மற்றும் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் இருந்தன.

பல நாட்டு மொழிகளில் எழுதிய பழைய புத்தகங்கள், ஓவியங்கள், நாணயங்கள் என்று கண்காட்சி அறை பிரமிப்பாக இருந்தது

நூலகத்தில் ஏதேனும் புத்தகத்தை படிக்க விரும்பினால், புத்தகத்தின் பெயரை சொன்னால் எடுத்து தருவார்களாம். அங்கேயே படித்துவிட்டு திருப்பி தரவேண்டும் என்று கூறினார்கள். சுமார் 50000/ ஒலைச்சுவடிகள் இருப்பதாகவும் அதில் சுமார் 500க்கு மேற்ப்பட்ட ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருப்பதாக கூறினார்கள். ஒரே ஒரு பண்டிதர் மட்டும் படித்து மொழிபெயர்த்து கொண்டிருப்பதால், வேலை மிகவும் தாமதமாக நடைப்பெறுவதாக கூறினார்கள். அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அங்கு வெளியில் விற்றுக்கொண்டிருந்தனர். பொதுவாக, ஜோதிடம், மருத்துவம், கடவுள் பாடல்கள் அதிகம் இருந்தன.

அடுத்து, இந்த நூலகத்தை ஏற்படுத்திய சரபோஜி மன்னரின் அரியாசனத்தையும் , அங்கு இருப்பதாக கூறப்படும் சுரங்கபாதை இடத்தையும் பார்த்தோம்.

வேறு ஒரு இடத்தில் சரபோஜி மன்னர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சி அரங்கத்திற்க்கு வெளியே உள்ள பகுதியில், பக்கத்திலிருக்கும் பள்ளி மாணவர்கள் வந்து மதிய உணவு அருந்திகொண்டிருந்தனர். அரண்மனையின் பல பகுதிகள் தொல்பொருள் துறையிடமும், அரசு அலுவலகங்களாகவும் மாறியுள்ளன.


பெரிய கோயிலுக்கு அருகே ஒரு கிராமத்தில் இராஜராஜ சோழனின் சமாதி கவனிக்கப்படாமல் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்கு சென்றிருக்கும் போது இது நினைவு வரவில்ல.
எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்து திரும்பினேன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D