Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Monday, 23 June 2014

இலக்கியம் என்றால் என்ன ?



அண்மையில் எழுத்துலகில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பேசப்படுகிறது.

1. திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிட்டது குறித்து

2. திரு. ஜெயமோகன் அவர்கள் , அவரது எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்களை தரக்குறைவாக எழுதுவது குறித்து.

திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டு விட்டது என்பது அதாவது தங்களது பெயர்கள் அதில் இல்லை என்று மறைமுகமாக கூறுவதுடன், தங்களால் எழுத்தாளர் என அங்கீகரிக்கப்படாத அல்லது தனிப்பட்ட முறையில் விரும்பாதவர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருப்பது குறித்த குற்றச்சாட்டு.

ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும் சூழ்நிலையில் அவர் படித்த எழுத்தாளர்களின் அடிப்படையில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்களை பட்டியலிட்டிருப்பார் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவரை விமர்சிப்பது எழுத்தாளர்களின் அறியாமையை காட்டுகிறது. அவர் தெரிந்தே பல பெயர்களை குறிப்பிடவில்லையென்றாலும், அவரிடம் சான்றிதழ் பெருவதன் மூலம் தான் அங்கீரக்கப்படுவீர்கள் என்றால் , உங்களுக்கு உங்கள் மீதும் படைப்புகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்று பொருள். எழுத்தாளன் வாசகனால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும். பட்டியலில் இடம் பெற்றோ, விருதுகளை வாங்குவதன் மூலமோ அங்கீகாரம் கிடைக்காது.

திரு. ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள்பெண்என்று முன்னிலை படுத்தி கொண்டதன் மூலமே எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்களுக்கு, பெண் எழுத்தாளர்கள் கூட்டாக கண்டன அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் சில ஆண் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சையை குறித்த அனைத்து தரப்பு வாதங்களையும் படித்தேன். சில சொற்களை திரு. ஜெயமோகன் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என தோன்றியது. ஆனால், அவரது கருத்துக்கள் அனைத்தும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

ஒரு தனி நபர் பெண்களின் எழுத்துக்களை அங்கீகரிக்கவில்லையென்றால். அவர்கள் எழுத்தாளர்கள் இல்லையென்று ஆகிவிடுமா. தொடர்ந்து எழுதி , வாசகர்களின் நன்மதிப்பை பெறும் போது, அவரது கருத்து தானாகவே மாறிவிடும்.

25 வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறேன்.

நான் வசிக்கும் டெல்லி பகுதியில் , தமிழ் வாசகசாலை இல்லாத நிலையில் இனையத்தில் இலவசமாக கிடைக்கும் அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் விருப்பு வெறுப்பின்றி படித்து வருகிறேன். புத்தகம் விலை கொடுத்த வாங்கலாம் என்றால் எந்த எழுத்தாளரின் எந்த புத்தகம் சிறந்தது என்று தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்ப்படுகிறது. மேலும், வாங்கிய பிறகு அந்த எழுத்து பிடிக்கவில்லையென்றால், சொத்துக்களை இழந்து விட்டது போன்ற மனநிலை ஏற்ப்படுகிறது.

எழுத்தாளர்கள் பரஸ்பரம் மற்றவர்களது எழுத்துக்களை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தாமல் அவர்களது கருத்துக்களை மட்டும் விமர்சனம் செய்தால் எழுத்தாளர்களிடையே மோதல் ஏற்ப்படாது.  எழுத்தாளர்கள குழுக்களாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.

எந்த எழுத்தாளராக இருந்தாலும் தாம் எழுதுவது இலக்கியம் என்று கூறுகின்றனர். இங்கு  எழுத்தாளர்கள் என்று குறிப்பிடபட்டிருப்பவர்கள் அனைவரையும் இலக்கிய எழுத்தாளர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களை கீழ்கானும் முறையில் பிரித்து அவர்களுக்கான சலுகைகள் செயல் திட்டங்களை செயல்படுத்தினால் இப்பிரச்சனையை தீர்க்கலாம் என தோன்றுகிறது.

() ஆண் எழுத்தாளர்கள்
() பெண் எழுத்தாளர்கள்
() முன்றாம் பாலின எழுத்தாளர்கள்
இவர்களை மீண்டும்
() தமிழ் எழுத்தாளர்கள்தமிழில் எழுதுபவர்கள்
() தமிழ் எழுத்தாளர்கள்ஆங்கிலத்தில் / வேறு மொழியில்எழுத்தாளர்கள்    
() மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள்

இவர்களை மீண்டும்
() முழு நேர எழுத்தாளர்கள்
() பகுதி நேர எழுத்தாளர்கள்
என்று வகைப்படுத்தலாம். மேலும், எழுத்தாளர்கள் என்றால், கதை, கட்டுரை, கவிதை எழுதுபவர்கள் அனைவரையும் குறிக்கும்.
மேலும், இவர்களை
() இடதுசாரி எழுத்தாளர்கள்,
() வலது சாரி எழுத்தாளர்கள்,
() நடுநிலை எழுத்தாளர்கள் ,
() பெண்ணிய எழுத்தாளர்கள்
() முற்போக்கு எழுத்தாளர்கள்
() தலித் இலக்கிய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தி அதில்
நவீனத்துவ எழுத்தாளர்கள், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
() சிறுகதை எழுத்தாளர்கள்
() தொடர் கதை எழுத்தாளர்கள்
() நெடுங்கதை எழுத்தாளர்கள்
() தொலைக்காட்சி தொடர் களுக்கு எழுதும் எழுத்தாளர்கள்
() திரைப்படத்திற்க்கு கதை / வசனம் எழுதுபவர்கள்
() இனைய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தலாம்.

எழுத்தாளர்களை ஒன்றினைக்கும் முயற்ச்சியாக பலமுறை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்ப்படுத்தப்பட்டாலும், இவர்களிடையே ஏற்ப்படும் சண்டை சச்சரவுகளால் அவை எதுவுமே செயல்படவில்லை.

தமிழக அரசும் , பல்வேறு தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் கொடுத்து கௌரவிக்கின்றன. இதழ்களிலும் அனைத்து தரப்பு எழுத்துக்களுக்கும் போட்டிகள் நடத்தி விருப்பு வெறுப்புடன் பரிசுகள் கொடுக்கின்றன.

இந்திய அரசும் சாகத்திய அகாதமி விருதுகளை வழங்குகிறது. உலக அளவிலும் பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

பல தரப்பட்ட எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்கள் எவ்வளவு எழுதினாலும், பதிப்பாளர்கள் பதிப்பித்து அதை வியாபாரமாக மாற்றுவதில்லை. மேலும், சில பல எழுத்தாளர்களின் எழுதுக்கள் பிரசுரிக்கப்பட்டாலும், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகைகளை வழங்குவதில்லை.

பல எழுத்தாளர்கள் தங்களது சொந்த காசில் நூல்களை அச்சிட்டு, விழா ஏற்ப்பாடு செய்து வெளியிட்டு பின்பு சக எழுத்தாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்

சொந்த காசில் அச்சடிக்க அரசு உதவி தொகை வழங்க வேண்டும். மேலும், இவர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். புத்தகம் விற்பனை ஆகாத நிலையில் உடனடியாக வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில் அரசு அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் அரசு அச்சகத்தில் அச்சிட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை வைக்க வேண்டும். தனியார் அச்சகங்களில் அச்சிடப்படும் அனைத்து நூல்களையும் , நூலகங்களுக்கு வாங்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டு முழுவதும் புத்தக கண்காட்சி நடத்தி புத்தக விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், பதிபகங்களில் தேங்கி கிடக்கும் புத்தகங்களை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, எல்லா அரசு விழாக்களிலும் விருந்தினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அவற்றை பரிசாக வழங்க வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு அந்த புத்தகங்களை இலவசமாக கொடுத்து கட்டாயமாக படிக்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் அரசே இலக்கிய கூட்டம் நடத்தி, அந்த மாதங்களில் அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களையும் அறிமுகம் செய்து வெளியிட வேண்டும். அரசு இதற்கென தனி வாரியம் அமைத்து, நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவி தொகை, ஓய்வுதியம், மருத்துவ காப்பீடு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை பற்றி எழுதியதை படித்த பலருக்கும் இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வி மனதில் தோன்றியிருக்கும்.

எழுத்தாளர்களுகிடையே இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே எழுத்தாளரே, பல் வேறு காலகட்டங்களில் இலக்கியம் என்பதற்க்கு பல்வேறு விதமான விளக்கங்களை தருகின்றனர்.
இலக்கியம் என்பதற்க்கு உறுதியான இறுதியான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்க்கும் அதன் பொருள் வேறுபடுகிறது. இலக்கியம் உரை நடையாகவும் இருக்கலாம், கவிதையாகவும் இருக்கலாம், நாடகமாகவும் இருக்கலாம்.  

ஆரம்ப கால இலக்கியங்கள் எல்லாம் செய்யுள் வடிவாகவே இருந்துள்ளது. அவை செவி வழி செய்தியாகவே பாதுகாக்கப்பட்டன. அச்சு வடிவில் புத்தகங்களாக வெளியிட வாய்ப்பு ஏற்ப்பட்ட பின்பே பல பிரதிகள் எடுக்கப்பட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன. இலக்கியத்திற்க்கு முடிவான சூத்திரங்கள் இல்லாத நிலையில் ஒர் பிரிவினருக்கு இலக்கியமாக தோன்றுவது மற்றோரு பிரிவினருக்கு வெறும் சொற்களின் கூட்டஞ்சோறாக தோன்றுகிறது.

வாசகன் என்ற முறையில், இலக்கியத்தை எந்த வகையில் படித்தாலும், எழுத்தாளர் எந்த மனநிலையில் எதை குறித்து எழுதினாரோ அது உணரப்படவேண்டும். வேறு புதிய முறையில் வாசகன் புரிந்து கொண்டாலும், எதை படிக்கிறோமோ அது காட்சிகளாக பிம்பங்களை மனதில் தோற்றுவிக்க வேண்டும். அவ்வாறு பிம்பங்களை தோற்றுவிக்க தவறினால், அது எழுத்தாளனின் குறையே தவிர வாசகனின் குறையல்ல. அவ்வாறு மனத்திரையில் காட்சிகளை உருவாக்க முடியாத எழுத்துக்கள் இலக்கியங்கள் அல்ல என்பது எனது கருத்து.

இலக்கியத்தின் வகைகள், இலக்கியத்தின் வடிவங்கள், இலக்கிய கூறுகள், இலக்கியத்தின் முக்கியத்துவம், இலக்கியத்தின் பிரிவுகள் என்று இதை விரிவாக விவாதிக்கலாம்

இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று பார்த்தால், ஒருவர் எழுதும் சுய சரிதம் (Autobiography) , ஒருவருடைய சரித்திரத்தை மற்றவர் எழுதுவது (Biography) வீட்டு செல்ல பிராணிகள் மூலமாக நீதி கதைகள் சொல்வது ( Fable) புனைகதைகள் (Fantasy) குறிபிட்ட வட்டார வழக்கு கதைகள் ( Folk Tale) மாவிரனின் கற்பனை கலந்த நிஜ வாழ்க்கை வரலாறு (Legend) இனம் சார்ந்த நம்பிக்கை கதைகள் (Myth) அறிவியல் கதைகள் (Scientific) 

இலக்கியத்தின் வடிவங்கள் என்று பார்த்தால், உரைநடையாகவும், கவிதையாகவும் கட்டுரையாகவும், நாடகங்களாகவும் இருக்கலாம்.

இலக்கிய கூறுகள் என்பது, சுருங்க சொல்லி நிறைய புரிய வைப்பது. தான் சொல்லியதை மட்டுமல்லாமல், படிக்கும், கேட்கும், பார்க்கும் அனைவருக்கும் மாற்று பொருளை சிந்திக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளாகவும் அல்லது புது வார்த்தைகளை உருவகப்படுத்தி வாசகனை இன்ப நிலைக்கு அல்லது துயர நிலைக்கு அழைத்து செல்வதாக இருக்கவேண்டும். உலக அளவில் துயரங்களை சொல்வதை தான் இதுவரை இலக்கியமாக ஏற்றுக்கொண்டுள்ளது. .

இலக்கியத்தின் முக்கியத்துவம் என்று பார்த்தால், இன்றைய நிலையில் அது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியங்கள் பொதுவாக மக்களிடையே படிக்கப்படுவதில்லை. இன்றைய நிலையில் தொலைக்காட்சிகளில் காட்சிகளாக பார்க்க நேரிடுவதால், எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கூட புரிந்துவிடுகிறது. புத்தகத்தை படிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நேரமின்மையும் ஒரு காரணம். பல் இலக்கியங்கள் துயரத்தை சொல்கிறது. வாழ்கையில் தினமும் துயரங்களை அனுபவிக்கும் மனிதன் மீண்டும் ஒரு துயரத்தை படித்து மன வலியை அதிகமாக்கி கொள்ள விரும்புவதில்லை. மேலும், பல இலக்கியங்கள் சாதாரண மனிதனின் வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. சாதாரண மனிதனின் வார்த்தைகளால் சொல்கிறேன் என்று வட்டார வழக்கு மொழியில் சொல்லும் போது , அது அனைத்து வட்டார மக்களாலூம் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியம் மற்ற கலாசாரத்தை சார்ந்த வாசகனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி பல காரணங்களை சொல்லிகொண்டே போக முடியும்.

இலக்கியத்தின் மூலம் மனித மனங்களில் மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியும். உணர்ச்சிகளை தூண்ட முடியும். அந்த மனித மன மாற்றங்களின் மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்

இடதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், குடியாட்சிக்கு ஆதரவு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதும், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை, மனித உரிமைகள், போர் எதிர்ப்பு, இயற்கை சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, தொழிற்சங்கம், பெண்களுக்கு சொத்துரிமை,  இவைகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களை இடதுசாரி எழுத்தாளர்கள் என்கிறார்கள்.

வலதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், பழமை கட்டி காப்பது, குறிப்பிட்ட இனம் மேன்மையானது என்கிற இனவாதம், சர்வதிகாரம், நிற வேறு பாடு காண்பது மற்றும் மதவாதம் போன்றவற்றை ஆதரிப்பது.

நடுநிலை எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் இடது மற்றும் வலது கொள்கைகள் இரண்டையும் கலந்து, மத சார்பற்ற முறையில் சிந்தித்து செயல்படுவது.

இடது சாரி எழுத்தாளர்கள் வலது சாரி எழுத்தாளர்கள் என்று அணி பிரிந்து நிற்க்கின்றனர். இடது வலதை வசைபாடுவது, வலது இடதை வசைபாடுவதும் நிகல் கால நிகழ்வு. தங்களுக்கு ஆதாயம் என்றால் இருவரும் கை கோர்த்து கொள்வார்கள்.

இவர்கள் இருவரும் நடுநிலைவாதியை எப்போதும் வசை பாடிக்கொண்டிருப்பார்கள்.  நடுநிலைவாதியின் கருத்துக்கள் தங்களுடைய கருத்துக்களுடன் ஒத்து போனால் அப்போது நடுநிலை வாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிவாசிகள் மற்றும் வறுமையில் வாடும் மக்கள் ( உயர் ஜாதி வகுப்பினர் தவிர்த்து) இவர்களை குறித்து எழுதுவது தலித் இலக்கியம்

முற்போக்கு எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் ஆரம்ப காலகட்டங்களில், விதவை திருமணம், குழந்தை திருமண எதிப்பு மற்றும் காதல் திருமணம் போன்றவற்றை ஆதரித்து எழுதியவை. தற்போது, காமத்தை பற்றி வெளிப்படையாக எழுதுவது , தகாத உறவு முறைகளை நியாயப்படுத்துவது போன்றவை என்ற அளவில் கருதப்படுகிறது.

பெண்ணிய எழத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் பெண்கள் பிரச்சனை பற்றி எழுதுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்ற நிலையிருந்த பெண்ணியம் என்பது இன்று வெறுமனே எல்லாவற்றுக்கும் ஆண்களை எதிர்த்து, ஆணாதிக்க மனப்பான்மை என்று கூக்குரலிடுவது என்ற அளவில் நிற்கிறது.

இவைகளை கடந்தும் நல்ல இலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவை வாசகனை அழ வைக்கிறது. கோபப்பட  வைக்கிறது. கழிவிரக்கம் செய்ய வைக்கிறது. இப்படி எல்லா உணர்ச்சிகளையும் தூண்டுகிறது. இந்த உணர்ச்சிகள் படிக்கும் போது ஏற்ப்படுகிறது. அதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கிறது. பின்பு வாசகன் தனது தினசரி வேளைகளில் முழ்கி இவற்றை மறந்து விடுகிறான். எத்தனை உபதேசங்களை கேட்டாலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. அது சாத்தியமில்லை. ஒரு துயரத்திற்க்காக சிறிது நேரம் வருந்தாலாம். சிறிய அளவில் ஏதெனும் உதவிகள் செய்யலாம். அதை நிரந்தரமாக போக்கிவிட முடியாது.

இலக்கியத்தை படித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையில் கடைபிடித்ததாகவோ அல்லது அதன் மூலம் தான் திருந்தி விட்டதாகவோ அல்லது சமூகத்தை சமுதாயத்தை திருத்தி விட்டதாகவோ கூறமுடியாது. அப்படி சில சமயங்களில் நடந்திருந்தாலும் அவை மீண்டும் சமூகத்தில் புகுந்து விடுகிறது. 

தீண்டாமை, விதவை திருமணம் , பிறன் மனை நோக்குதல், கள் உண்ணுதல் இப்படி பல விசயங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை நின்று விட்டதாக கூற முடியாது. உடன்கட்டை ஏறும் பழக்கம் நின்று விட்டதாக வாதத்திற்க்காக குறிப்பிடலாம். அவை இலக்கியங்களால் நிற்க்கவில்லை. மக்களின் மன மாற்றத்தாலும் சட்டங்களாலும், கல்வியறிவு போன்ற காரணங்களாலும் நின்றதே தவிர இலக்கியங்களால் நின்று விட்டதாக கூற முடியாது.

இலக்கியங்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பினாலும் அவை சமூகத்தில் தனிமனிதனிடத்திலோ அல்லது சமூகத்திலோ மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

இலக்கியங்கள் குறித்த வாசகனின் கருத்தை இலக்கியவாதிகள் அறிய முயற்சி செய்வதுமில்லை அவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வாதம் செய்து வாசகனை தன்னை விட ஒரு படி தாழ்ந்தவன் என்று காட்டவே முயற்சி செய்கின்றனர்.











Saturday, 14 June 2014

பொழுது போகல



காலை ஒன்பது மணி. கடும் கோடையில் 45 டிகிரி வெப்ப நிலையில் தவித்த மக்களுக்கு இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை மிகப் பெரிய ஆறுதல்.

மழை பெய்ய ஆரம்பித்தவுடன், என் வீட்டிற்க்கு எதிரில் இருக்கும் மின்சார கம்பத்தில் வான வேடிக்கை நடந்தது. பொதுவாக நான் வசிக்கும் பகுதியில் சற்று காற்று வீசினாலோ அல்லது தூறல் போட்டாலோ மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள். ஆனால், காலையில் சற்று கவன குறைவாக இருந்த காரணத்தால், வான வேடிக்கை நடந்துவிட்டது. இப்போது மின்சாரம் இல்லை.

என் வீட்டு வாசலில் இருக்கும் பெரிய வேப்ப மரத்தின் கீழ் ஒரு மிதி வண்டிகாரர் மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்.  வீட்டிற்க்கு எதிரில் தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் முன்று பேரும் தங்களது வண்டியை நெகிழியால் போர்த்துகின்றனர்.

பழைய செய்திதாள்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் நபரும், தனது வண்டியில் இருக்கும் பொருட்கள் நனையாமல் இருக்க நெகிழி கொண்டு மூடுகிறார். காற்றில் நெகிழி பறக்கிறது. மழைக்கு ஒதுங்கி நின்ற மிதிவண்டிகாரர் அவருக்கு உதவி செய்கிறார்.  அவர் நனைவதை பற்றி கவலைப்படவில்லை. உதவி செய்யும் பொருட்டு அவர் நனைவதை அவர் அறியவில்லை என தோன்றுகிறது. இருவரும் மீண்டும் மரத்தடியில் வந்து நிற்கின்றனர். போலியான நன்றி என்ற வார்த்தையை அவருக்கு உபயோகிக்க தெரியவில்லை. இருவரும் பேசிக்கொள்கின்றனர். வேறு ஒரு மிதி வண்டிகாரரும் அங்கு வந்து அவர்களுடன் பேச ஆரம்பிக்கிறார். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள். மழை வந்து தங்களது பிழைப்பை கெடுத்து விட்டது என்றா அல்லது மழை வந்ததால் வெப்பம் குறைந்தது என்றா அல்லது தனது கிராமத்தில் விவசாயத்திற்க்கு இந்த மழை உதவும் என்றா.  எல்லோரும் பிழைப்பு தேடி இங்கு வந்தாலும், அவர்களது சொந்த மண் வறண்ட நிலமாக இருந்தாலும், அதைப்பற்றி பேசிக்கொள்வதில் சிறிது மகிழ்ச்சி உண்டாகிறது.

இரண்டு மிதி வண்டிகாரர்களும் தங்களது வண்டியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். அப்படி உட்கார்ந்த வேளையில் ஒரு மாணவன் வந்து ஒரு வண்டியில் உட்கார வண்டி நகர்கிறது. எங்கே போக வேண்டும் எவ்வளவு கூலி என்று பேசியதாக தெரியவில்லை.  ஒரு பெண்மணி வந்து மற்றோரு மிதிவண்டியில் உட்கார அதுவும் நகர்ந்து விடுகிறது.. பழைய சாமன் வாங்குபவன் எப்போது இடத்தை விட்டு நகர்ந்தான் என தெரியவில்லை.

மழை நின்று விட்டது எனது பக்கத்து வீட்டுகாரர் ஸ்கூட்டரை வெளியே எடுத்து உதைக்கிறார். அது கிளம்புவதாக கானோம். தனது மகனை கபில் கபில் என்று கூப்பிடுகிறார். இவருக்கு நல்ல குரல்வளம். இவர் தனது வீட்டில் ரகசியமாக பேசினால், எனது வீட்டில் மிகவும் நன்றாக கேட்கும். இவர் சாதாரணமாக பேசினால், வீட்டில் ஏதொ சண்டை நடப்பது போல இருக்கும். முன்பெல்லாம் தொலைபேசியில் இவர் STD  பேசினால்,  அந்த நபருக்கு மட்டுமல்ல எங்கள் தெரு முழுவதும் கேட்கும். ஸ்கூட்டர் கிளம்பவில்லை. அதை வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் புறப்பட்டு சென்று விட்டார்.

சிவப்பு புடவை கட்டிய பெண்மணி மழையில் நனைந்த உடையுடன் நடந்து செல்கிறார். மக்கள் நடமாட்டம் வாகன நடமாட்டம் அதிகமாகி விட்டது.

தள்ளு வண்டியில் ஒரு பெரிய பாத்திரத்தில் பிரியானி விற்கும் நபர் வருகிறார். அவரது வண்டியில் பெரிய  பானையில் பிரியானி இருக்கும். அதை ஒரு புறமாக சாய்த்து வைத்திருக்கிறார். ( இஸ்லாமிய மக்கள் தம் பிரியானி செய்ய பெரிய பித்தளை பாத்திரத்தை உபயோகிப்பார்களே அது ) இவரும் இஸ்லாமியர். பித்தளை பாத்திரத்துக்கு பக்கத்தில் மற்றோரு பாத்திரத்தில் குழம்பு இருக்கிறது. ஒரு எடை போடும் இயந்திரமும் இருக்கிறது. தினமும் வந்து என் வீட்டுக்கு எதிரில் நிறுத்துவார். என் வீட்டுக்கு எதிரில் கடைகள் இருக்கின்றன. அதில் ஒரு முடி திருத்தும் கடையும் இருக்கிறது. அது இஸ்லாமிய இளைஞர்களால் நடத்தப்படுகிறது.. இவர் வண்டியை நிறுத்திவிட்டு அந்த கடைக்கு சென்று சொல்லி விட்டு வருவார்.

அவர்கள் வந்து பிரியாணி வாங்குவார்கள். எடை போடும் இயந்திரத்தின் ஒரு பகுதியில் உள்ள கிண்ணத்தில் ஒரு துண்டு செய்தி தாளை வைப்பார். பிறகு பெரிய பாத்திரத்திலிருந்து பிரியானி சாதத்தை வைப்பார். பிறகு தேடி தேடி ஒரு துண்டு மாமிசம் வைப்பார். அது கோழி பிரியானியா ஆட்டு பிரியானியா அல்லது மாட்டு பிரியானியா என தெரியவில்லை. எவ்வளவு எடைக்கு வைக்கிறார் என தெரியவில்லை. பிறகு அதில் சிறிது குழப்பு ஊற்றுகிறார். அந்த செய்திதாளுடன் பிரியானியை மடித்து நெகிழி பையில் வைத்து தருகிறார். ஒரு முறை முடி வெட்ட சென்ற போது அந்த இளைஞர்களிடம் விசாரித்தேன். அது 20 ரூபாயம். அது அவர்கள் காலை சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.

காய்கறி விற்கும் இரண்டு இளைஞர்களும் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களும் இஸ்லாமியர்கள். சாலையில் செல்பவர் நின்று விசாரித்து அவரும் வாங்கி வண்டியின் ஓரத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு காசு கொடுத்து நகர்ந்து செல்கிறார்.

தெருவில் குப்பை அள்ளும் இளைஞர் என் வீட்டு வாசலில் குப்பை அள்ளுகிறார். இவர் எப்போதும் நல்ல முழு நீள கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்திருப்பார். Shoe போட்டிருப்பார். என்னை பார்த்தால் ஒரு வணக்கம் சொல்லுவார். என் வீட்டின் வெளிப்பகுதியை பெருக்கி குப்பையை அள்ளுவார். அது அவரது வேலை அல்ல. எனது மனைவி சொல்லியிருப்பதால் அதை செய்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து, மணி அடித்து என் மனைவியை அழைத்து அதற்க்கான காசு வாங்கி செல்வார். எவ்வளவு என தெரியவில்லை.

எங்கள் தெருவில் குப்பை தொட்டி கிடையாது. சற்று தள்ளி இருக்கிறது. இங்கு காலையில் ஒருவர் வண்டி கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் மணி அடித்து அழைத்து குப்பையை வாங்கி செல்வார். இவருக்கு மாதா மாதம் காசு கொடுக்க வேண்டும். இவரது சேவையை உபயோகிக்காமல், குப்பை தொட்டியில் சென்று போடுபவர்களும் உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அவரது சம்பளத்தை கேட்பார். என் மனைவி, இன்னமும் சம்பளம் வரவில்லை இரண்டு நாள் கழித்து தருகிறேன் என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார். நீங்க என்ன எனக்கு ஆயிரகணக்கிலா தருகிறீர்கள் என்று வாதம் செய்து முதல் தேதியே வாங்கி செல்வார்.

இவரை காலை 11 மணி அளவில் மீண்டும் பார்க்கலாம். கருப்பு நிற Hero Honda வண்டியில் இரண்டு பெண்மனிகளுடன் சென்று கொண்டிருப்பார். அநேகமாக அது அவரது மனைவியும் மகளுமாக இருக்க வேண்டும். அவர்களும் காலையில் இந்த பகுதிக்கு வந்து துப்புரவு தொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் வேலை முடிந்தவுடன் ஒன்றாக வீடு திரும்புகிறார்கள் என நினைக்கிறேன். 

காவி வேட்டி கட்டிய சாமியார் வருகிறார். இவருக்கு நான் தானம் செய்வதில்லை. ஐந்து ரூபாய் தானம் கொடுத்தாலும் வாங்க மாட்டார் . குறைந்தபட்சம் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இரண்டு ரூபாய் கொடுத்த போது திருப்பி கொடுத்து சென்று விட்டார். அன்றிலிருந்து நான் எதிரில் இருந்தாலும் என்னிடம் கேட்ப்பதில்லை. நானும் கொடுப்பதில்லை. எனது பக்க்துவீட்டு பெண்மணி இருபது ரூபாய் கொடுத்து விட்டு ஒரு கும்பிடு போடுவார். இவரும் ஏதோ ஆசிர்வாதம் செய்து கொண்டே நகர்வார்.

வேறு ஒரு சாமியார், பௌர்னமி, அமாவாசை , பிரதோசம் அன்று தெருவில் வந்து சங்கு ஊதுவார். குறிப்பிட்ட வீடுகளின் முன்பு தான் சங்கு ஊதுவார். அந்த வீட்டு பெண்மணிகள் காசு கொடுத்து விட்டு வணங்குவார்கள். இவர்களும் ஆசிர்வாதம் செய்வார்கள். இவர்களுக்கு எப்படி நாள் கிழமை தெரிகிறது என புரியவில்லை.

அப்போதெல்லாம் பாய்ஸ் படத்தில் வரும் செந்திலின் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வரும். எந்த பகுதி கோயிலில் எந்த கிழமையில் என்ன பிரசாதம் கொடுப்பார்கள் எத்தனை மணிக்கு கொடுப்பார்கள் என விவரமாக கூறுவார். அதற்க்காக ஒரு குறிப்பும் வைத்திருப்பார்.  Information is knowledge என்று கூறுவார். எனக்கு ஒவ்வொரு முறையும் இந்த காட்சி தான் நினைவுக்கு வரும். இந்த சாமியார்கள் ஏதேனும் Tablet  வைத்துள்ளார்களோ என்னவோ. இதுபோன்ற சாமியார்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள BPO அமைப்பு வைத்துள்ளார்களே என்னவோ.

இத்தனை காட்சிகளையும் ஜன்னல் வழியாக பார்த்து எழுதிகொண்டிருக்கிறேன். இன்னமும் மின்சாரம் வரவில்லை. எனது சம்சாரமும் தேநீர் எடுத்துக்கொண்டு வரவில்லை. இப்போது எனக்கு புகை பிடிக்க வேண்டும். வாங்குவதற்க்காக கடைக்கு போக வேண்டும். வாங்கி வருவதற்க்குள் மின்சாரம் வந்து விட்டால் இதை முகநூலில் ஏற்றி விடுவேன். இல்லையெனில் இந்த கட்டுரையை தொடரலாம் என எண்ணுகிறேன். பொருத்திருங்கள்  சீக்கிரம் வந்து விடுகிறேன்.

புகை பிடித்தாயிற்று ஆனால் இன்னமும் மின்சாரம் வரவில்லை. என்னடா ஒன்னும் இல்லாத விசயத்த இவ்வளவு பெருசா எழுதுறான் அப்பிடின்னு தானே தோனுது. அப்பிடி தாங்க ரொம்ப பேர் எழுதுறாங்க. அவங்களுக்கு எழுத்தாளர்கள்ன்னு பேர்.

ஒரு விசயத்த பார்த்துட்ட அத சுத்தி சுத்தி ஜிலேபி மாதிரி சுத்தி சுத்தி எழுதுவாங்க. சின்னதா ஒரே ஒரு முறை மட்டும் எழுதினா அது சிறுகதை. பெரிசா எழுதினா நெடுங்கதை. அப்பப்போ, தொடர்ச்சியா எழுதினா அது தொடர்கதை. 

அதை இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. அவங்கள இலக்கியவாதிகள்ன்னு சொல்லுவாங்க. இதுலே என்ன இலக்கியம் இருக்குன்னு கேட்ட, ஒனக்கு இலக்கியம் பத்தி என்ன தெரியுமுன்னு நம்மள திருப்பி கேப்பாங்க. சரிப்பா நீயே சொல்லுன்னா எதோ எதோ சொல்லுவாங்க. எதுவுமே புரியாது. என்னப்பா முன்னாடி வேற மாதிரி சொல்லியிருந்தியேன்னு கேட்ட அதுவும் இலக்கியம் இதுவும் இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. சரி முடிவா எது இலக்கியன்னு சொல்லுன்னு கேட்டா அப்பிடி சொல்லமுடியாது. இது கலை இதுக்கு முடிவான சூத்திரம் இல்லேன்னு சமாளிப்பாங்க.

வேறோரு எழுத்தாளர் இப்படி சொல்லியிருக்காரேன்னு கேட்டா , அவன்னெல்லாம் இலக்கியவாதியான்னு ஒரு புடி புடிப்பாங்க. வாயில நொழயாத பேர்ல்லாம் சொல்லி அவங்க தான் இலக்கியவாதின்னு சொல்லுவாங்க. 

சமயத்திலே இந்த இலக்கியவியாதிகள் சண்ட போடுறத பார்த்த, சேரிலே பொம்பளங்க கொழயடி சண்ட போடுற மாதிரி இருக்கும்.

இருங்க இருங்க என்ன சொல்ல வர்றிங்க. இப்போ நான் எழுதியிருக்கிறதே இலக்கியம் மாதிரி இருக்குன்னு சொல்றிங்களா. பாத்திங்களா கலாய்கிறிங்க. இப்பிடி உசுப்பு எத்தி வுட்டதாலே தான் ஏகப்பட்ட பேர் தன்ன இல்லக்கியவாதிகள்ன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க.

சும்மா இருங்க என்ன ரொம்ப புகழாதிங்க. ஏற்கனவே  நான் எழுதினத படிச்ச வெள்ளகாரங்க, அட சேகர் யாருக்கும் ஒன்னும் புரியாத மாதிரி எழுதுறான் இவன் பெரிய இலக்கியவாதியா இருப்பான்னு, 2014 வருசத்துக்கான இலக்கிய நோபல் பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறதா செய்தி கசியுது.


நீங்களும் என்ன இலக்கியவாதின்னு சொன்ன அவங்க நெஜமாகவே நம்பி நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க.

என்ன நீங்க ரொம்ப தொந்தரவு செஞ்ஜா அத நான் வாங்கி தான் ஆவனும்.
சரி விடுங்க. இவ்வளவு நேரம் இத பொறுமையாக படிச்சதுக்காக உங்களுக்கு சிறந்த வாசகர்ன்னு பட்டம் கொடுக்கிறென்.

Friday, 24 January 2014

இலக்கியம் - எழுத்து

சென்னை புத்தக கண்காட்சி::


சென்னை புத்தக கண்காட்சி பற்றி முகநூலில் ஏகப்பட்ட பதிவுகள். நிறைய எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டு விழாவை பற்றியும், மற்ற எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா பற்றியும் நிறைய எழுதியுள்ளனர்.

பலர் தங்களது புத்தக கண்காட்சி விஜயம் குறித்தும் பதிவுகள் எழுதியுள்ளனர். புத்தகம் வாங்கியதாக கூறி சாட்சியாக புத்தகங்களுடன் புகைப்டங்கள்  வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் படிக்க தான் வாங்கினார்களா அல்லது பெருமை பேச வாங்கினார்களா என தெரியவில்லை.

இதே தருணத்தில் கோவையில், தமிழ் பண்பாட்டு மையம் , “தாயகம் கடந்த தமிழ்என்ற தலைப்பில் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு ஒன்றை மூன்று நாட்கள் நடத்தியுள்ளது.

இதில் வெளிநாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் ,, சில உள்ளூர் எழுத்தாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால், இது குறித்து முகநூல் எழுத்தாளர்கள் எவரும் எதையும் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.

இந்த நிகழ்ச்சி குறித்து இந்த உள்ளூர் எழுத்தாளர்களுக்கு தெரியாதா அல்லது தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்ற காரணமா ?  தாயகம் கடந்த எழுத்தாளர்களுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லையென நினைத்துவிட்டார்களா

சென்னை புத்தக கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிலும், புத்தக அரங்குகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த காரணத்தாலும் இது குறித்து கவனம் செலுத்த முடியாமல் போயிவிட்டதா ?

அல்லது எழுத்தாளர்களுக்கிடையே உள்ள அரசியலா ? எதுவாக இருந்தாலும் இப்படி வேற்றுமை காட்டி வாழும் இவர்களால், சமூகத்திற்க்கு நல்ல எழுத்தை அளிக்கமுடியுமா ?

அண்மையில் எழுத்தாளர்களின் பட்டியல் தயாரிக்கலாம் என முயற்சிசெய்து இனையத்தில் தேடினேன்.

என் மண்டையில் உள்ள மயிரை கூட எண்ணிவிடலாம் ஆனால் இந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை. அத்தனை எழுத்தாளர்கள். எழுத்தாளர்களை என்னுவதைவிட வாசகர்களை எண்ணிவிடலாம் அதனால் அந்த முயற்ச்சியை தற்காலிமாக நிறுத்திவிட்டேன். எழுத்தாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1. கவிஞர்கள் 
பலர் எல்லோருக்கும் புரியும் படி எழுதுகிறார்கள். சாதரணமாக எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளமுடியும். இவர்கள் பொதுவாக எழுதும் தலைப்பு, தாய், தந்தை மற்ற உறவுகள் குறித்து, அந்த நாளைய வாழ்க்கை முறை, மொழி , இனம், ஜாதி ? கல்வி, கலவி, இயற்கை, அன்றாட சமூக நிகழ்வுகள் போன்றவை.

சிலர் தங்களது இலக்கிய அறிவை பயன்படுத்தி, பொதுவாக மக்கள் பயன்படுத்தாத சொற்களை கொண்டு, கவிதை எழுதுவது. இதை எல்லோராலும் படித்து புரிந்துகொள்ள முடியாது. இதை சொன்னால், உனக்கு இலக்கிய அறிவு இல்லையென்றும், உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்றும் விவாதத்திற்க்கு அழைப்பார்கள். பொதுவாக காதல் அல்லது காமம் சார்ந்தே இவர்களது கவிதைகள் இருக்கும்.

மிக சிலர் எழுதுவது வெகு சிலருக்கே புரியும். தங்களது இலக்கிய மேதாவிதனத்தை பறைசாற்றி கொள்ள வார்த்தைகளை வாடகைக்கு வாங்கி கோர்த்திருப்பார்கள்.  வார்த்தைகளும் வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். இதையும் பலரும் பாரட்டியிருப்பார்கள். பாரட்டாவில்லையென்றால், இந்த கவிஞர்கள் தங்களை தற்க்குறி என நினைத்துவிடுவார்கள் என்று பாரட்டிவிடுவார்கள். என்ன எழுதியிருந்தது அதன் பொருள் என்ன தான் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்று எதையும் எழுதி புகழமாட்டார்கள். கவிதையில் இருந்து ஒரு வாக்கியத்தை எடுத்துகாட்டி – “ எப்படி உங்களால் இப்படி கற்பனை செய்ய முடிந்த்துஇதைவிட அழகாக ஆழமாக சொல்லமுடியாது அப்படி இப்படி என்று ஏகத்துக்கு பாரட்டியிருப்பார்கள். கடைசிவரை அந்த வரிக்கு என்ன அர்த்தம் எப்படி புரிந்துகொண்டார்கள் என்று விளக்கவேமாட்டார்கள். அது எதோ ரகசிய ஆவண குறி சொல் போல் பாதுகாப்பார்கள். காரணம் அது அவர்களுக்கும் விளங்கவில்லை என்பதுதான் பொருள். இதை செய்பவர்கள் பெரும்பாலும் சக எழுத்தாளர்களாக தான் இருப்பார்கள். இப்படி பாரட்டினால்தான் பதிலுக்கு இவர்களது எழுத்துக்களுக்கு அவர்களிடம் பாரட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாரட்டி எழுதியிருப்பார்கள்.

பள்ளியில் செய்யுள் பகுதி பொதுவாக மாணவர்களுக்கு புரிவதில்லை. அதனால், விளக்கவுரை, பொழிப்புரை கொடுப்பார்கள். அதுவும் புரியாதபட்சத்தில் கோனார் உரை உதவிகரமாக இருக்கும். எனவே, இது போன்று கவிதை எழுதுபவர்கள் தனியாக கோனார் உரை போன்று ஒன்று கொடுத்துவிடலாம். அல்லது கவிதைக்கு கீழ் செய்யுளுக்கு கொடுப்பது போல் பொழிப்புரை கொடுத்துவிடலாம்.

அண்மை காலத்தில் சிலரது கவிதைகளை படிக்கும் போது இப்படிதான் உணர்ந்தேன். பின்பு ஒருவழியாக மற்றவர்களுடைய கருத்துக்களுடன் சேர்த்துபார்த்து பொருள் புரிந்துகொண்டேன். அத்தனையும் அங்கங்களை வர்ணிப்பது, அங்கங்களை இனைக்கும் செயலை விவரிப்பதுமான கவிதைகள். சொற்கள் ஆடையிழந்து அம்மனமாக வலம் வந்துகொண்டிருக்கும். அவர்கள் பயன்படுத்திய சொற்களை நீக்கிவிட்டு , மிகச் சாதரணமான மக்கள் பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்தி படித்துபார்த்தேன். ( அதாவது தமிழிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு ) மிகவும் கொச்சையாக பச்சையாக காமத்தை விளக்கும் கவிதைகள். இப்படி நான் மாற்றுசொல் பயன்படுத்தி படித்ததை இங்கு எழுதினால் (எங்கு எழுதினாலும்) அது மஞ்சள் பத்திரிக்கையில் எழுதப்படும் எழுத்துக்களாக இருக்கும். நிச்சியமாக தடைசெய்யப்படவேண்டிய எழுத்துக்களாக இருக்கும் . காமலோகம் என்ற இனையதளத்தில் வேண்டுமானால் எழுதலாம்.

சரி, நமது செய்யுள்களும், கடவுளை பாடும் பக்தி பாடல்களிலும், தற்போது திரைப்படங்களில் வரும் பாடல்களும் அப்படிதானே இருக்கிறது என விவாதம் செய்வார்கள். உண்மை தான். அதனால் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால், நேரடியாக அனைவரும் புரிந்துகொள்ளும் வார்த்தைகளை உபயோகித்தால், அனைவரும் புரிந்துகொள்ளமுடியும். அவர்களுக்கு வாசகர் வட்டமும் பெரிதாக இருக்கும். அவர்களது எழுத்துக்களை தேடிப்பிடித்து படிப்பார்கள். புத்தக விற்பனையும் நன்றாக நடக்கும். வருமானமும் கிடைக்கும்.

2. சிறுகதை  எழுத்தாளர்கள்:

சிறுகதையில் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். பொதுவாக 5 முதல் 10 நிமிடத்தில் படித்துவிடலாம். இப்போதெல்லாம் மின்னல் வேக கதைகள், ஒரு பக்க கதைகள் என்றெல்லாம் கதைகள் வருகிறது. படிக்க சுவையாக இருக்கும். பெரிதாக ஒன்றும் பாதிப்பை ஏற்ப்படுத்தாது. விதிவிலக்காக  சிந்திக்கவைக்கும் வகையில் சில கதைகள் படிக்க நேரிடுகிறது. எழுதுவதற்க்கு அனுபவத்தை ஏற்படுத்திகொள்ள இது போன்ற கதைகள் உதவும்.

பொதுவாக சமூக சிந்தனை என்ற பெயரில் தங்களது விருப்பு வெறுப்புகளை பதிவு செய்வதுதான் இந்த சிறுகதைகள். ஆனால், நான் நட்ட நடு சென்டராக விருப்பு வெறுப்பு இல்லாமல் கதை எழுதியுள்ளேன் என்று கூசாமல் பொய் சொல்வார்கள். கதைக்கு தலைப்பு வித்தியாசமாக கவர்ச்கிகரமாக கொடுப்பார்கள். எப்படி எழுத்துக்கள் புரியாதோ அதே போல கதைக்கு போடும்படங்களும் ஒன்றும் புரியாது. சம்மந்தமே இருக்காது. தனது குறியை தானே சுவைப்பது போன்ற படங்கள் இருக்கும். சாத்தியமே இல்லாத இந்த நிலை போல , கதைக்கும் படத்திற்க்கும் சம்மந்தமே இருக்காது.

3 நெடுங்கதை நாவல் எழுத்தாளர்கள் நாவல் என்ற பெயரில், நெடுங்கதை எழுதுபவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாதிகாளாக அங்கீகாரம் பெற, சம்பவ இடத்தின் வர்ணைகளை அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி எழுதியிருப்பார்கள். அதிலும் கொடுமை, வட்டார வழக்கு மொழியில் எழுதியிருப்பார்கள். அந்த கதை என்ன அந்த வட்டார மக்களுக்கு மட்டும் தான் எழுதப்படுகிறதா ? அந்த வட்டாரத்தை சார்ந்த இன்றைய இளைய தலைமுறைக்கு கூட அது புரியாது.

வேறு ஒரு பிரபலமான எழுத்தாளர் அவரது சமூக வழக்க சொற்களை பயன்படுத்திஅவா ஆத்துலே வெறுஜ் மோருஞ்சாதம்என்று எழுதினால், வர்க்க ரீதியாக பாகுபடுத்தி வசைபாடுவார்கள். ஆனால், இவர்கள்  ஏலே, கருக்காலே கஞ்சி குடிச்கிட்டுபோலேஎன்று எழுதி தான் ஆதி தமிழன் என்று பறையடிப்பார்கள்.

சமூக சாடல், வர்க போரட்டம், மொழி இன போரட்ட கதைகளில் வார்த்தைகளில் வன்முறையிருக்கும். எதிரிகளை தோலுரித்து தொங்கவிடுவார்கள். மை கொண்டு எழுதாமல் திராவகத்தை கொண்டு எழுதி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்பதன அறைகளில் ஓய்வெடுப்பார்கள்.

எல்லோருக்கும் வெகுஜன ( குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ) பத்திரிக்கையில் எழுத ஆசை. ஆனால், வாய்ப்பு கிடைப்பதில்லை. சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல , இந்த பத்திரிக்கைகள் இலக்கிய தரம் வாய்ந்தது அல்ல என்றும் நடிகையின் அக்குளுக்குள் இருக்கும் அசிங்கத்தை எழுதுபவர்கள் என்று தூற்றுவார்கள்.

தங்களது எழுத்து பிரசுரமாகும் சிற்றிதழ்கள் ( இது தான் உலக இலக்கியம் பேசும் இதழ்கள் என்பது இவர்களது கருத்து ) இலக்கிய இதழ்கள் என்பார்கள். அனைவரும் படிக்க வேண்டும் என்பார்கள். ஆயுள் சந்தா செலுத்த சொல்வார்கள். அந்த இதழ்களின் ஆயுள் 2-3 இதழ்களுடன் முடிந்துவிடும். அடுத்த இதழ் வெளிவர பொருளுதவி செய்யும்படி வேண்டுகோள் விடுவார்கள். இந்த மாதிரியான சிற்றிதழ்களிலும் இவர்களது எழுத்துக்கள் வெளிவரவில்லையென்றால் இவர்களே சிற்றிதழ் தொடங்கிவிடுவார்கள். பாதி இதழில் பலபெயர்களில் இவர்களே எழுதிக்கொண்டிருப்பார்கள். தனது நட்பு வட்டத்தை பயன்படுத்தி  புகழாரம் சூட்டி கொள்வார்கள். இதுவும் முடியவில்லையென்றால், இனையத்தில் இருக்கும் சிற்றிதள்களில் எழுதுவார்கள். அதிலும் முடியவில்லையென்றால், தனது வலைப்பூவில் எழுதுவார்கள். அதை முகநூலில் பிரபலப்படுத்துவார்கள்.

அதே சமயம் பிரபல வணிக இதழ்களுக்கு தங்களது எழுத்துக்களை அனுப்பிகொண்டேயிருப்பார்கள். தப்பி தவறி ஏதேனும் பிரசுரமாகிவிட்டால் அதை முகநூலில் பகிர்ந்து விளம்பரபடுத்திகொள்வார்கள். அதுவரை மஞ்சள் பத்திரிக்கையாக இருந்த இதழ்கள் தற்போது இலக்கியத்திற்க்கு முக்கியத்துவம் தருவதாகவும் இது தொடர வேண்டும் என பாரட்டி எழுதுவார்கள்.

இவர்களது எழுத்துக்களை தவிர மற்றவர்கள் எழுத்து பிரபல பத்திரிக்கைகளில் வெளிவரும் போது, ஜால்ரா பார்ட்டி என்றும் சொம்பு தூக்குகிறான் என்றும் , அவர்களது அரசியல், மதம் ஜாதி பின்புலத்தை சொல்லி அதனால் தான் அவரது எழுத்துக்கள் வெளியாகிறது என்று அவர்களது மேதாவிதனத்தை வெளிப்படுத்துவார்கள்.

இவர்களது எழுத்து பிரபல பத்திரிக்கையில் வெளியானவுடன் அத்துடன் திருப்தியடையமாட்டார்கள் தங்களுக்கு சன்மானம் தரவில்லை என்றும், எழுத்தாளர்களை மதிக்காத பத்திரிக்கைகள் என்றும் வசைபாடுவார்கள்.

ஒருசிலர் தொலைகாட்சிகளில் தலைகாட்ட வாய்ப்பு கிடைக்கும். சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தை சொல்லிகொண்டிருக்கும் போது, மாறுபட்ட கருத்து என்ற முறையில் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருப்பார்கள்.

காயடிக்கப்பட்ட காளைமாட்டுக்கு கையடித்து விட்டு காமதேனுவை போல் பால் கறக்கிறது என்ற ரீதியில் சம்மந்தமே இல்லாமல் காமத்தை விவரித்து கதை எழுதி, வாசகர் வட்டம் என்று ஒன்றை தானே உருவாக்குவார்கள்.

இப்படியெல்லாம் செய்து சிறிது பிரபலமான பிறகு அடுத்த இலக்கு புத்தகம் வெளியிடுவது. இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து கவிதை தொகுப்பு வெளியிடுவது அல்லது சிறுகதை தொகுப்பு வெளியிடுவது என்று தங்களது சொந்த காசில் சூனியம் வைத்துகொள்வார்கள். அப்படியே சில பதிப்பகங்கள் பிரபலமாகிவிட்ட எழுத்தாளர்களின் தொகுப்வை வெளியிட்டால்,, அதற்க்குறிய சன்மானம் தரவில்லை என்று ஒரு புலம்பலை ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர்களது அடுத்த நோக்கம் இவர்கள் திட்டி தீர்க்கும் திரைப்பட துறையில் நுழைவது . இவர்களது கவிதையை திரைபடபாடலாக்கி புகழ் பெற வேண்டுமென்பது. அதற்காக தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், வெளியே சொல்லி கொண்டிருக்கமாட்டார்கள். தங்களது கதை திரைப்படமாக வேண்டும் என்ற விருப்பத்திலும் பலர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

தினமும் திட்டிதீர்க்கும் தொலைகாட்சி, தொடர்கள், மாமியார் மருமகள் கதைகளையும், தவறான உறவு முறை கதைகளையும் மெகா தொடர்களாக வெளியிடுகிறது என்றும் நல்ல சிறுகதைகளை தொலைகாட்சியில் காண்பிக்க வேண்டும் என்று கூறி பலரது கதைகள கூறும் போது தங்களது கதைகளையும் இடைய புகுத்திவைப்பார்கள்.

பெண் எழுத்தாளர்கள் முன்பெல்லாம சமையல் குறிப்பும் கோலம் போடுவது எப்படி என்றும் பண்டிகைக்கு பட்சனம் தாயரிப்பது எப்படி என்றும் எழுதிகொன்டிருந்தார்கள். இப்போது ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று புறப்பட்டு வந்து, பெண்ணியம், பெண்விடுதலை, மனித உரிமை, பெண்ணின் பார்வையில் காமம் அப்படி இப்படி என்று எழுதி அவர்களும் பிரபலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் புதிதாக எழுதவருபவர்களுக்கு, ஆலோசனை சொல்வார்கள். நிறைய படிக்க வேண்டும் என்பார்கள். எதை படிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுப்பார்கள். சிலர் ஆரம்பிக்கும் போதே மணிக்கொடி காலம் என்று ஆரம்பிப்பார்கள். சமூகத்தை உற்று நோக்கி அதிலிருந்து அனுபவங்களை பெற்று எழுத வேண்டும் என்பார்கள்

இவர்கள் எதை எதையெல்லாம் படித்துள்ளார்கள் என்று கேட்டால் நிறைய சொல்வார்கள். அதாவது, கதை புத்தகத்தின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கதையை படித்தது போல நாடகம் போடுவார்கள். கதையை பற்றி பேச ஆரம்பித்தால், படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும் ஞாபகம் இல்லையென்றும் கழன்டு விடுவார்கள். இவர்களிடம் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் என்ன என்ன எழுதியுள்ளார் என்று கேட்டால் சொல்ல தெரியாது. ஏதாவது கதையை குறிப்பிட்டு இதை யார் எழுதியது என்று கேட்டாலும் சொல்ல தெரியாது. இதில் விசேச அம்சம் என்னவென்றால், இவர்கள் எழுதிய பழைய எழுத்துக்களை குறிப்பிட்டு யார் எழுதியது என்றும் இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டால், இது போன்ற குப்பைகளை படிப்பதில்லை என்பார்கள். இது நீங்கள் எழுதியதுதான் என்று கூறினால், இது எழுத்துலக வாழ்வில் ஆரம்ப காலத்தில் எழுதியது என்றும் அதனால் ஞாபகம் இல்லையென்றும், தனது ஆரம்ப கால எழுத்தை தாங்களே கிண்டலடித்து சாமாளிப்பார்கள்.

அதிகமாக விற்கும் புத்தகங்கள் எல்லாம் சிறந்த இலக்கியங்களும் அல்ல. விற்காத புத்தகங்கள் எல்லாம் இலக்கியதன்மை அற்றது என்ற பொருளும்  அல்ல .

பதிப்பகங்களுக்கு பொருளாதார ரீதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அவைகள் புது எழுத்தாளர்களை ஊக்குவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எழுத்தாளர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவிற்க்கு விற்பனையாகிறதா என தெரியவில்லை.

பகுதி நேர எழுத்தாளர்களுக்கு கொடுக்கவில்லையென்றாலும், முழு நேர எழுத்தாளர்களுக்கு, இலக்கியத்திற்க்காக வாழும் எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாழ தேவையான அளவு சன்மானம் கொடுக்கவேண்டும்.

இவர்கள் இப்படியெல்லாம் கூத்தடித்தாலும், மிக அதிகமாக இவர்களை கொடுமை செய்வது வாசகர்களே. காசு கொடுத்து புத்தகம் வாங்குவதில்லை. யாரவது வாங்கினால் அதை சுட்டுகொண்டு வருவது அல்லது பழைய புத்தக்கடைகளில் தேடுவது இதனால் எழுத்தாளர்களுக்கு போதிய வருவாயும் பதிப்பகங்களுக்கு லாபமும் கிடைப்பதில்லை. அரசு நூலகங்கள் புத்தகங்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், அரசும் எத்தனை புத்தகங்களை தான் வாங்கமுடியும். வாங்கினாலும் வாசகசாலைகளில் அதை வைத்து பாதுகாப்பதற்க்கும் இடம் வேண்டும். எந்த வகையில் தேர்வு செய்து வாங்கினாலும், யாரவது ஒருவர் குறை சொல்லிகொண்டுதான் இருப்பார்.

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களிடமிருந்து ஆயிரக்கனக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. ஒரு சாதாரண வாசகன் எப்படி எது நல்ல புத்தகம் என்று இனம் கான்பான். அவனுக்கு பிடித்த விசயத்தை கூறும் புத்தகம் அவனளவில் நல்ல புத்தகம் ஆனால் மற்றவர்கள் அதை குப்பை என்று ஒதுக்கியிருப்பார்கள். நல்ல புத்தகத்தை அடையாளம் கான்பதும் அதை தேடிப்பிடித்து படிப்பதும் இன்றைய நிலையில் மிகவும் சிரமம். படித்தவர்கள் யாரவது அது குறித்து குறிப்பு எழுதினால் அதன் அடிப்படையில் வாங்கலாம். படித்த புத்தகத்தை பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நேர்மையான விமர்சனத்தை எழுத்தாளனுக்கும், மற்ற வாசகர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இயற்கை வளம் அழிக்கப்படுவதற்க்கு எழுத்தாளர்களும் ஒரு காரணம். குப்பையான எழுத்துக்களை பிரசுரிக்க மரங்களை வெட்டி காகிதம் தயாரிப்பதன் மூலம் , காடுகள் அழிகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்த மர அழிப்பின் மூலம் தாயரித்த காகிதங்கள் மூலம் தான் தெரிவிக்கப்படுகிறது.

இலக்கியம் வளர எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், அரசு மற்றும் வாசகர்கள் இனைந்து செயல்படவேண்டும். புத்தகங்கள் பொழுதுபோக்குக்காக படிப்பது என்பது வேறு. அது தனி மனிதனை சிந்திக வைக்கவும் அதன் மூலம் தனது வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்திகொள்ள கூடியதாகவும் இருக்கவேண்டும். தனிமனிதன் மாறினால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

சங்க கால இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவைகள் பலராலும் படிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சமூகத்தில், தனிமனித வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்ப்பட்டுள்ளதா என தெரியவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இன்னமும் நிறைய சொல்ல வேண்டும். இதுவரை படித்தவர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்ப்பட்டிருக்கும், என்ன சொல்ல வருகிறான் எல்லாவற்றையும் குறை கூறும் இவன் என்ன சாதித்துவிட்டான என்ற கேள்வியும் உங்களுக்குள் எழுந்திருக்கும். நான் யாருக்கும் எதையும் உபதேசம் செய்யவில்லை. சில வருடங்களாக படிக்க முயற்சி செய்ததில், நல்ல எழுத்துக்களை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதால் இதை எழுதினேன். 

மேலும் இலக்கியம் எழுத்து என்று வாழ்க்கையை வீணடிக்கவேண்டாம் என்பது எனது வேண்டுகோள். 

எல்லா எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்





.