Showing posts with label வஞ்சப்புகழ்ச்சி. Show all posts
Showing posts with label வஞ்சப்புகழ்ச்சி. Show all posts

Monday, 21 July 2014

பாரி - ஊதாரி



முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வள்ளல்

பாரி வள்ளல் சிறிய வளமான பிரதேசத்தை ஆண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. 

அவர் வெளியே சென்று விட்டு வரும் போது, வழியில் முல்லைகொடி படருவதற்க்கு பிடிப்பு இல்லாமல் காற்றில் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் இரங்கி அந்த கொடி படர்வதற்க்காக தனது தேரை அந்த முல்லை கொடியின் அருகில் நிறுத்தி அதில் படர விட்டதாக சொல்லப்படுகிறது.

அவர் புலவர்களுக்கு வாரி வாரி செல்வத்தை வழங்கியதால் அவர் பாரி வள்ளல் என்று புகழப்பட்டுள்ளார்.

1) அவரது நாட்டுல் ஒரே ஒரு முல்லை கொடி மட்டும் தான் இருந்ததா அல்லது ஒரு கொடி மட்டும் தான் படருவதற்க்கு பந்தல் இல்லாமல் இருந்ததா அல்லது அதன் அருகில் வேறு செடி அல்லது மரம் இல்லாமல் இருந்ததா ? அது ஏன் ஒரு முல்லை கொடிக்கு மட்டும் தனது தேரை கொடுத்தார். அது போல் படர வாய்ப்பில்லாத மற்ற கொடிகளுக்கு ஏன் தேரை வழங்கவில்லை

2) அவ்வளவு இரக்க குணம் உள்ளவராக இருந்தால், அவருடன் வந்தவர்களின் உதவியுடன், மரக்கிளைகளை உடைத்து  காய்ந்த இலை தழைகளை உபயோகித்து ஒரு பந்தல் அமைக்காமல் ஏன் அவர் பயணம் செய்யும் தேரை அங்கே நிறுத்தி அதில் கொடி படர விட வேண்டும்.

3) அவர் என்னதான் வளமான நாட்டின் மன்னனாக இருந்தாலும், அவருக்கு பணம் விவசாயி அல்லது தொழிலாளி மூலமாக தான் வந்திருக்கும். வரி வசூலித்து தான் செல்வம் சேர்த்திருப்பார். உழைப்பாளிகளை சுரண்டி ( எந்த ஆட்சியாளர் வசதியாக இருந்தாலும் அல்லது தேவையற்ற செலவுகளை செய்தாலும் சுரண்டி பிழைத்தார் என்று தான் இன்றைய போராளிகள் சொல்கிறார்கள்) வசூலித்த பணத்தில் செய்யப்பட்ட தேரை இப்படி பொறுப்பற்ற முறையில் வீனாக்கிய ஒரு மன்னனை எப்படி வள்ளல் என்று கூற முடியும். அவரும் ஒரு விவசாயி அல்லது தொழிலாளி போல் உழைத்து சம்பாதித்திருந்தால் இது போன்ற செய்கையை செய்வாரா.

ஒரு வேளை அவரது தேர்  வரும் வழியில் அச்சு முறிந்து அதை மேற்கொண்டு செலுத்த முடியாத நிலையில் அதை ஓரத்தில் நிறுத்தி விட்டு , குதிரை மூலம் ஊர் திரும்பியிருக்க கூடும்.

அந்த தேர் மீது அருகில் இருந்த முல்லைகொடி படர்ந்திருக்கும். அதை பார்த்த புலவன் , வஞ்சப் புகழ்ச்சியாக ( நக்கலும் நையாண்டியாக ) அதை சொல்லி மன்னன் முன் பாடி பரிசு பெற்றிருக்கலாம்.

அவர் புலவர்களுக்கு வாரி வழங்குபவர். வஞ்சப்புகழ்ச்சியை புரிந்து கொண்டோ அல்லது புரியாமலோ பரிசை வழங்கியிருக்கலாம். அல்லது இப்படி எழுதி வைத்ததை அவர் அறியாமல் இருந்திருக்கலாம். பின்பு மற்றவர்கள் கையில் கிடைத்து இன்று நாம் அதை படித்து கொண்டிருக்கலாம். 

வஞ்சப்புகழ்ச்சியை அல்லது பொறுப்பற்ற ஊதாரிதனமாக செலவு செய்த மன்னனை நாமும் பெருமையுடன் கூறி நமது மன்னர்கள் எத்தகைய வள்ளல்கள் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறோம்.

மன்னனை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் என்பது சரி. இந்த புலவர்கள் என்றும் உண்மையை சொல்வதில்லை. கற்பனையாக இட்டுக்கட்டி புகழ்ந்து பாடுவது. அந்த மன்னர் ஒன்றும் செயற்கரிய சாதனைகள் செய்ததாக குறிப்புகள் இல்லை. பாரி வள்ளல் என்று மட்டும் தான் குறிப்பிடப்படுகிறது.

இன்றைய கால வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ஜால்ரா போட்டவர்களுக்கு காசை வாரி இறைத்துள்ளார். உழைத்து சம்பாதித்த காசாக இருந்தால் இப்படி செய்வாரா. இப்படி பொறுபில்லாமல் நடந்து கொண்ட மன்னனை இன்றைக்கும் வள்ளல் என்று புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு அறியாமை.

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை புகழ்ந்து பாடும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாராட்டி சில சலுகைகளை அளித்தால் அதை ஏன் மக்கள் வசைபாடுகிறார்கள். இவர்களையும் வள்ளல் என்று கூறி பெருமைபட வேண்டியது தானே.