Sunday 30 November 2014

காவியத்தலைவன்



காவியத் தலைவன் - திரைப்பட விமர்சனம்


காவியத் தலைவன் தமிழ் திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுத காரணம், இயக்குனர் திரு.வசந்த பாலன் வித்தியாசமான திரைப்படங்களை வழங்குபவர் என்பதாலும் பிரபலமான எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கதை வசனத்தில் வெளிவந்துள்ள படம் என்பது தான் காரணம். இதுவே வேறு ஒரு இயக்குனர் இயக்கியிருந்தால் இரண்டு வரி விமர்சனத்தில் முடித்திருப்பேன்.
                
கதை நடக்கும் கால கட்டம் 1900லிருந்து 1945 வரை என்று கூறப்படுகிறது. நாடகம் மற்றும் தெருக்கூத்துக்களே மக்களின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக இருந்த கால கட்டம்.

நாடக குழு நடத்துபவர் மற்றும் அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இருவருக்குள் நடக்கும் பிச்சனையே திரைக்கதை.

நசிந்து விட்ட நாடக கலையை தூக்கி பிடிக்கவும் அதை உயிரூட்டவும் அதன் அருமை பெருமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று யாராவது கூறினால் அவர்களை மனநல மருத்துவரை அனுக அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த படத்திற்க்கு ஏதெனும் விருதுகள் வழங்கப்பட்டாலும் அது போலியானதாக தான் இருக்கும்.

முக்கிய கதாபாத்திரத்துக்கு இப்போது கதாநாயகன்-ஹீரோ என்று குறிப்பிடுகிறோம். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு ராஜபார்ட் என்று பெயர். பொதுவாக நாடகம் ராஜாக்களின் கதையை மையமாக வைத்தே எழுதப்பட்டு நடிக்கப்பட்டது. ராஜா வேடத்தில் நடிப்பவர் தான் முக்கிய கதாபாத்திரம் . அவரை சுற்றியே அவரது அருமை பெருமைகளை கூறியே கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ராஜாவின் பகுதியை தமிழ் ஆங்கிலம் சொல் கலந்து ( பகுதி =  PART ) கலந்து உருவாக்கப்பட்ட பெயரே ராஜபார்ட் என்று நிலைத்து விட்டது. இந்த முக்கிய பாத்திரத்தில் நடிக்க பல வருட உழைப்பும் ஈடுபாடும் தேவை. அந்த நிலையை அடைய மிகுந்த சிரத்தை தேவை.

இந்த படத்தில் ராஜபார்ட் வேடமிடுபவர் நாடக குழுவிலிருந்து விலகியவுடன் இளைஞர்களாக இருக்கும் இருவரில் (பிரித்திவிராஜ்-சித்தார்த்) ஒருவரான சித்தார்த் ராஜபார்ட் வேடத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரித்திவிராஜ் பொறாமை படுகிறார். சித்தார்த்தை எதிரியாக நினைத்து கொண்டு சந்தர்ப்பம் இடைத்தவுடன் அவரை நாடக குழுவிலிருந்து நீக்கி விடுகிறார். பல வருடங்களுக்கு பின்பு சித்தார்த் துனையுடன் நாடகம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படுகிறது. மீண்டும் சித்தார்த்தை துரத்த அவர் வேறோரு நாடக குழு ஆரம்பித்து நிகழ்கால விடுதலை போராட்ட நிகழ்ச்சிகளை நாடகமாக நடத்த அது பெரும் வெற்றியடைகிறது. பிரித்திவிராஜ் பழைய நாடகங்களையே நடித்து நட்டமடைய அவர் சித்தார்த் குழுவின் தயவில் நடிக்க வேண்டிவருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவரை மணந்து கொள்ள பிரித்திவிராஜ் விரும்பினாலும் அவள் சித்தார்த்தையே விரும்புகிறாள். பிரித்திவிராஜ் சித்தார்த்தை பழி வாங்குகிறார்.

இறுதி காட்சி இயக்குனர் திரு. மகேந்திரன் இயக்கிய உதிரிபூக்கள் படத்தின் இறுதி காட்சியின் அப்பட்டமான நகல்.

நாடகம் பார்க்க ராஜா, ராணி மற்றும் இளவரசி வருகிறார்கள். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறவில்லை. சித்தார்த்துக்கு இளவரசியுடன் காதல் ஏற்ப்படுகிறது. சர்வ சாதாரணமாக அவரது இடத்திற்க்கு செல்கிறார். காதலிக்கிறார். சல்லாபிக்கிறார். அந்த இடத்திற்க்கு ஜமின் மாளிகை என்று கூறுகிறார்கள். ராஜா ராணி இளவரசி வாழும் இடத்திற்க்கு அரண்மனை என்று தானே கூற வேண்டும் ஜமீன் மாளிகை என்று ஏன் கூறுகிறார்கள் 

வேறு ஒரு இடத்தில், சித்தார்த்தை நாய் என்று குறிப்பிட்டு நாய் ஜமீன் மாளிகையில் வாய் வைத்து விட்டது என்று வசனம் வருகிறது. அவர்கள் ஜமின் குடும்பம் என்றால்  ஜமின்தார் என்றும் ஜமின்தார் மகள் என்று தானே குறிப்பிட வேண்டும். ராஜா ராணி இளவரசி என்று எப்படி வசனம் வருகிறது. அது மன்னர் குடும்பமா அல்லது ஜமின்தார் குடும்பமா ?

ஒரு நாடக நடிகன் அவ்வளவு எளிதில் இளவரசியின் இடத்தில் சென்று காதலித்து காமம் செய்து கர்பம் உண்டாக்கி விட முடியுமா. கதையில் இது மிகப் பெரிய சொதப்பலாக தோன்றுகிறது...

சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிட காந்தியின் ஒரு திரைப்படத்தை காட்டுகிறார்கள். சிறையில் சந்தித்த சிலர் மூலம் சுதேசி இயக்கத்தை புரிந்து கொண்டு நாடகம் நடத்துவதுடன் சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அன்னிய துணி எரிப்பு போராட்டத்தில் துணிகளை எரிக்கிறார்கள். தீ வைத்தவுடன் மொத்த துணிகளும் உடனடியாக பற்றி எரிகிறது. ஒரு பக்கத்தில் தீ வைத்தால் சிறிது சிறிதாக தான் எரிந்து வரும் இதில் மொத்தமாக குப் என்று தீ பிடிக்கிறது. இது போல பல அபத்தமான காட்சிகள் நிறைய இருக்கிறது.

கிட்டப்பா பாகவதர் – கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கை இந்த கதையின் அடித்தளம் என்று கூறப்படுகிறது.

இதில் எந்த கதாபாத்திரமும் வட்டார வழக்கு மொழியை பேசவில்லை. குறைந்தபட்சம் வட்டார வழக்கு இல்லையென்றாலும் அந்த கால பேச்சு மொழியாக இருந்திருக்கலாம். வசந்தபாலனின் முந்தைய திரைப்படம் அங்காடி தெருவில் துணிக்கடையில் வேலை செய்பவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் ஏழை மக்கள் வேலை செய்கிறார்கள் என்பதை நிலைநாட்ட அந்த கதாபாத்திரங்கள் அந்த மாவட்ட மொழியை பேசுவதாக அமைந்திருக்கும். இதில் மதுரை மாவட்ட வட்டார மொழியோ அல்லது வேறு எந்த பகுதி வட்டார வழக்கு மொழியோ பயன் படுத்தப்படவில்லை என்பது ஒரு குறையாக தோன்றுகிறது.

வசனம் எழுதிய ஜெயமோகனுக்கு குழப்பம் ஏற்ப்பட்டிருக்கலாம். அந்த கால பேச்சு மொழியாக எழுதினால் ரசிகர்களுக்கு புரியாது என நினைத்திருக்கலாம். மேலும், அவர் எழுதி வரும் மகாபாரத தொடரில் உபயோகிக்கும் மொழி குறித்து விமர்சனம் உள்ளது. இவைகளை தவிர்க்க மொழியின் காலத்தை நிலத்தை நிர்ணியிக்க முடியாத அளவில் கலப்படமாக ஒரு மொழியில் வசனங்களை எழுதியுள்ளார்.

பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்க முடிகிறது. வாத்தியங்களில் ஓசை பாடல் வரிகளை அமுக்காமல், தெளிவாக கேட்கும் படி இசை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
இன்றைக்கும் நாடகங்கள் நடைப்பெறுகிறது ஆனால்  மக்களிடையே போதிய ஆதரவு இல்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நாடகம் நடத்துபவர்களும் அதை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். 
 
நிஜ நாடக நடிகர்களை நடிக்க வைத்து நாடக நடிப்பை இந்த படத்தில் உணர்த்தியிருக்கலாம்.

பிரித்திவிராஜ் மற்றும் சித்தார்த் இருவரும் நடிகர்கள் நடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் கலைஞர்களை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்.
 
நாடக துறையை பற்றிய விவரங்களை சொல்ல முயற்சித்தாலும் வணிக ரீதியாக வெற்றியடைய செய்ய நிறைய சமரசங்களை செய்துள்ளதால் சொல்ல வந்த செய்தி நிறைவு பெறவில்லை.






Thursday 13 November 2014

இளமையின் இறுதி படியில் – முதுமையின் முதல் படியில் - 1



சீறிப்பாயும் குதிரையின் வேகத்துடன் வெளியே வந்தான். மண் சாலையில் குதிரையின் குளம்படி ஓசைகளை எழுப்பிய படி சாலையின் திருப்பத்துக்கு வந்தான்.  வந்தியதேவன் கூட இத்தனை வேகமாக குதிரை பயணம் செய்திருப்பானா என்பது ஐயம். அவனது காலடி கிளப்பிவிட்ட புழுதி மணல் புகை மூட்டம் போல சாலையெங்கும் வியாபித்திருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள்சனியனேஎன சொல்லிக்கொண்டு தும்மினர். பெண்கள் தங்களது சேலை முந்தானையால் மூக்கை மூடிக்கொண்டனர். அவனுக்கு பின்னால் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன

காலை ஆறு மணிக்கு இத்தனை ஆரவாரத்துடன் சென்ற பதினைந்து வயது வாலிபன் மீது சில பெண்கள் தங்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்த்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மெல்லிய உடல் ஒட்டிய வயிறு சற்று பெருத்த தலை அகன்ற தோள்பட்டைகள் மெல்லிய கைகள். தோள்களுக்கும் கைகளுக்கும் சம்மந்தமில்லாமலிருந்தது. சட்டை போடாத வெற்றுடம்பு. உள்ளாடை அணியாத லுங்கி அணிந்த கீழுடை. இவையனைத்தையும் ஜன்னல் வழியே பார்க்கும் பெண்களின் மனநிலையை அவன் அறியமாட்டான்.

சாலையின் திருப்பத்திற்க்கு வந்த அவன் எதிர்புறம் இருந்த மைதானத்தில் பசுமாடுகளும் எருமை மாடுகளும் கட்டப்பட்டு, அதற்கு அருகில் பால் கறப்பவர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தான் . பால் கறந்தவர்கள்  ஒரு மாட்டிடம் பாலை கறந்த பின்பு சாலையின் ஓரத்தில் இருந்த பால் கடையில் அளந்து கொடுத்து விட்டு மீண்டும் வேறு ஒரு மாட்டிடம் பால் கறக்க வந்தனர்.

மாட்டுகாரன் மாட்டின் முதுகில் தட்டி அதை சற்று நகர வைத்து அதன் மடியில் கை வைத்து பால் கறக்க வசதியாக குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். அரைகால் கால்சட்டையுடன் வெற்றுடம்பில் ஒரு துண்டு போட்டுக்கொண்டிருந்தான். மாட்டின் காம்பில் கை வைத்தவுடன் அது துள்ளி சற்று நகர்ந்து நின்று கொண்டு வாலை வேகமாக ஆட்டியது. இவனும் உட்கார்ந்த நிலையிலேயே சற்று நகர்ந்து உட்கார்ந்தான். ஜொடுதலையிலிருந்த நீரை மாட்டின் காம்புகளில் தடவி ஈரப்படுத்தினான். காம்புகளை உருவி விட்டு தயார் படுத்தினான். லேசாக தடவி விட்ட படியே இரண்டு விரல்களால் காம்பை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். மாடு இப்போது அசையாமல் நின்றது. பால் சுரப்புக்கு தயாரன நிலையில் அதற்கு என்ன மனநிலை இருந்தது என தெரியவில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்த வாலிபன் காம்பை அழுத்தி பிடித்து கசக்கி விட்டு கீழ் நோக்கி இழுத்து விட்டான்.

பால் கடைக்காரர் பால் விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரவர் வசதிகேற்ப்ப அரை லிட்டர் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் என பால் வாங்கி கொண்டிருந்தனர்

வாலிபன் அமைதியாக சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் ஒரு லிட்டர் பால் கேட்டார். அளந்து பார்த்த போது குறைவாக இருந்தது. அவரை சற்று நேரம் பொறுத்திருக்கும் படி கூறி விட்டு, வாலிபனை அழைத்து அவனுக்கு நூறு மி.லி. பால் கொடுத்தார். அவருக்கு தெரியும் எப்போதும் இவனுக்கு 100 பால் தான் கொடுக்க வேண்டும் என்று. அதிகம் கொடுத்தாலும் அவனால் வாங்க முடியாது அவன் கொண்டு வந்திருக்கும் டம்ளரில் 100 பால் தான் கொடுக்க முடியும். அதுவே தளும்பி வடியும்.

அந்த பாலை வாங்கி கொண்டு மிகவும் மெதுவாக பாம்பு போல ஊர்ந்து வருவான். பால் சிறிதும் சிந்தி விட கூடாது என மிக கவனமாக வருவான். அதை அவன் தாயிடம் கொடுத்தவுடன் அவனது வேலை முடிந்தது.

தாய். அன்றைய பாண்டிய நாடான மதுரை பட்டிணத்தில் பிறந்தவள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மதுரை கோட்டை இடிக்கப்பட்ட காலத்தில் கோட்டையின் தெற்கு பகுதியில் குடியிருந்த இருந்த ஜடாமுனி கீழிறங்கி வேகமாக ஓடி தனக்கு மாற்றிடம் தேடிக்கொண்ட இடத்தில் பிறந்து வளர்ந்தவள். அந்த சாலைக்கு பெயரே ஜடாமுனி கோயில் சாலை. மிகுந்த செல்வ செழிப்புடன் வாழவில்லையென்றாலும், உயர்தர மத்திய வர்கமான குடும்பம்.

அதற்கு அருகாமையில் அமைந்துள்ள தெற்கு மாசி வீதியில் அன்றைய திவானுக்கு கணக்கராக இருந்த குடும்பதின் வழித்தோன்றலாக 10 பிள்ளையாக பிறந்தவனுக்கு மாலையிட்டு விதி வசத்தால் , கோவலனும் கண்ணகியும் பிழைப்புக்காக மதுரை வந்தது போல், இவர்கள் கெட்டும் பட்டணம் போ என்ற முதுமொழிக்கு ஏற்ப மதுரையிலிருந்து சென்னை பட்டிணம் வந்து , ஆற்காடு சாலையின் கோடம்பாக்கம் பகுதியில் குடியேறி வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தனர்

அந்த தாயிடம் தான் இந்த வாலிபன் 100 மி.லி. பாலை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து கொடுத்தான்.

அந்த தாய் அதனை காய்ச்சி வெள்ளையாக இருந்த பாலை வேறு நிறத்தில் மாற்றி ( என்ன நிறம் என்று அறுதியாக இறுதியாக என்றுமே சொல்ல முடிந்ததில்லை) அதற்கு காப்பி என பெயரிட்டிருந்தாள். வாங்கி வந்த பாலில் பாதியளவு தான் ஐந்து டம்ளர் காப்பி தயாரிக்க பயன் படுத்தியிருந்தாள். அதை ஆற்றுவதாக கூறி நான்கு முறை நன்றாக மேலே தூக்கி ஆற்றும் போது நுங்கும் நுரையுமாக வாசனையுடன் டம்ளர்களில் கொப்பளிக்கும். முக்கால் டம்ளர் காப்பியும் மீதி நுரையுமாக  டம்ளர் வழிய வழிய கணவருக்கு கொடுக்கும் போது, அவளது கணவன், பாற்கடலில் கடைந்தெடுத்து கொடுத்த அமிழ்தை போல இரு கைகளாலும்  பய பக்தியுடன் வாங்கி ஊதி ஊதி மெதுவாக ரசித்து ருசித்து குடிப்பார்.

அடுத்த பெரிய மகனுக்கும் அடுத்து மகளுக்கும் கொடுப்பார். பால் வாங்கி வந்த இளைய மகன் தூரத்தில் உட்கார்ந்திருப்பான். அவனை காப்பியை வாங்கி குடிக்கும் படி கூறுவாள் அவன் அதை வாங்கி குடிக்க மறுத்து விடுவான். அவனுக்கு நிறைய பால் போட்டு கெட்டியாக காப்பி போட்டு குடித்தால் தான் குடிப்பான் இல்லையெனில் மறுத்து விடுவான். பெரும்பாலான நாட்களில் அவன் காப்பி குடிக்க மாட்டான். அதற்கு பிறகு தாய் ஒரு டம்ளர் காப்பி குடிப்பாள். இளையவன் குடிக்காததால் மீதமான காப்பிக்கு மற்றவர்கள் டம்ளரை நீட்டுவார்கள். தாய் மறுத்து விடுவாள். அந்த மீதமான காப்பியை பகல் 11 மணியளவில் சூடு செய்து தாயும் மகளும் குடிப்பார்கள்.

மீதமுள்ள பாலில் பாதியை எடுத்து மாலை 4 மணியளவில் இரண்டு டம்ளர்கள் காப்பி தயாரித்து தாயும் மகளும் குடிப்பார்கள். அந்த நேரத்திலும் நமது வாலிபன் மறுத்து விடுவான். அந்த சமயத்தில் மூத்த மகன் சில நாட்கள் கல்லூரியிலிந்து திரும்பி வந்தால் , தாய் குடித்துக்கொண்டிருக்கும் காப்பி டம்ளரில் உள்ள மிச்சமுள்ள காப்பியை கொடுத்தால் மறு பேச்சின்றி மூத்த மகன் குடித்து விடுவான். இதை சொல்லி காட்டி இளையவனுக்கு தினமும் அர்ச்சனை நடந்தாலும் அதை அவன் காதில் வாங்கி கொள்வதில்லை.

இரவு பத்து மணிக்கு மேல் வேலையிலிருந்து திரும்பி வரும் கணவருக்கு எப்போதும் போல ரசம் சாதம் கிடைக்கும். மறு முறை கொஞ்சம் சாதம் வைத்துக்கொண்டு மனைவி முகத்தை ஏறிட்டு பார்ப்பார். அவள் புரிந்து கொண்டு உள்ளே சென்று மீதமிருக்கும் 20-25 மி.லி. பாலையும் சக்கரையும் கொண்டு வந்து கொடுப்பாள். அதை சாதத்தில் ஊற்றி நிறைய சர்க்கரையும் தண்ணீரும் கலந்து மிகவும் ஆனந்தமாக சாப்பிடுவார். அரை குறை தூக்கத்தில் இருக்கும் மகளை எழுப்பி இரண்டு வாய் ஊட்டி விடுவார்.

100 மி.லி. பாலில் காலையில் ஐந்து டம்ளர் காப்பியும், மாலையில் இரண்டு டம்ளர் காப்பியும் , மீதமிருக்கும் பாலில் கணவனுக்கு பால் சோறு கொடுக்கும் திறமை படைத்த தாய்

அவளது இளைய மகன் அந்த தாய் உயிரோடு இருந்த வரை தயாரித்த காப்பியை 90% நிராகரித்துள்ளான்.

45 வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்சிகளை அவன் நினைத்து பார்த்து, உலகறிய இனையத்தில் M.S.SEKAR என்ற பெயரில், தான் எழுத ஆரம்பித்திருக்கும்இளமையின் இறுதி படியில்முதுமையின் முதல் படியில்என்ற தொடரில் முதலாவதாக எழுதுவான் என அந்த தாய் நினைத்திருக்க மாட்டாள்.
 


Tuesday 11 November 2014

ஆழி சூல் உலகு – ஜோ டி குருஸ் - புதினம்


ஆழி சூல் உலகு – ஜோ டி குருஸ்



மனித நாகரீகம் ஆற்றங்கரைகளில் தான் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. அடுத்து அதிக நீர் இருக்கும் பகுதி கடற்கரை. கடல் நீர் குடி நீராக பயன்படாவிட்டாலும், அந்த நீரில் வாழும் உயிரினங்களை கொண்டு வாழ்க்கை வாழும் சமூகம் பரதவர் (மீனவர் ) சமூகம். மீன்கள், சங்குகள், முத்துகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு வாழும் பரதவ இன மக்களை பற்றி கூறும் புதினம்.

கடல் நீரின் தன்மைகள் , நீரோட்டத்தின் தன்மைகள், மாறும் இயல்புகள் இவற்றை மிக விரிவாக எடுத்து சொல்கிறார்.

கடலில் பயனிக்கும் போது வீசும் காற்று படகை மரக்கலங்களை எவ்வாறு திசை திருப்புகிறது அதை எவ்வாறு சரி செய்து பயணிப்பது போன்ற விவரங்களை தந்துள்ளார்.

கடலில் ஆபத்தான சூழ்நிலையில் பல நாள் மாட்டிக்கொண்டால் எந்த வகையான உணவு உட்கொள்வது எப்படி உயிரை பாதுகாத்து கொள்வது போன்ற விவரங்களையும் தந்துள்ளார்.

கடலில் வாழும் உயிரினங்கள் அதை பிடிக்க கையாளப்படும் உத்திகள் அதன் சிரமங்கள், உயிரனங்களின் குணங்கள், உணவாக பயன்படுபவை மற்றும் நண்பனாக இருப்பவை, மீனவர்களின் உயிரை பறிப்பவை எனவும், எந்த வகையாக உயிரினங்கள் மீனவனின் வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிப்பவை என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

கடற்கரை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் பரதவர்கள் கொண்டு வரும் பொருட்களின் மூலம் செல்வந்தர்களாகி, அருகில் இருக்கும் ஊர்களிலும் இலங்கையிலும் எவ்வாறு வியாபாரத்தை பெருக்கினார்கள் என்பதையும் சொல்கிறார்.

இலங்கைக்கு சென்றவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வியாபாரத்தில் நொடித்தும் இனகலவரங்களின் காரணமாகவும் வெளியேறி சொந்த மண்ணுக்கு திரும்பி வந்து எவ்வாறு மறுவாழ்க்கை அமைத்து கொண்டார்கள் என்பதையும் துயரத்துடன் விவரிக்கிறார்.

போர்ச்சுகீஸ்லிருந்து வந்தவர்கள் இங்குள்ள மக்களின் அறியாமை, ஏழ்மை இவைகளை பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றினாலும், சில போதகர்கள் உண்மையிலேயே இவர்களுக்கு நல்லது செய்துள்ளனர். இவர்கள் மூலம் தான் படிப்பறிவு பெற்று அடுத்த தலை முறை ஆபத்தான கடலில் மீன் பிடிக்கும் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு வேலைக்கு சென்றுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

அரசு இவர்களுக்காக கொண்டு வரும் நல திட்டங்களை இவர்களிடம் மறைப்பதில் பாதிரியார்களும், அரசியல்வாதிகளும், வங்கி துறையினரும் எவ்வாறு ஈடுப்பட்டனர் என்பதை விவரித்துள்ளார்.

இவர்களது குடும்ப உறவுகள் சடங்குகள் தனி மனித ஆசாபாசங்கள், காதல் களவு காமம் அரசியல் சண்டை, துரோகம் உதவி நட்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். உறவுகளுக்குள் முறை தவறும் உறவுகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். இதை படிக்கும் போது, உறவின் சிக்கல்கள் மூலம் ஒழக்கம் என்பது சரியாக பேணப்படவில்லை என்பது போல் தோன்றுகிறது. இதில் இவர்க்ளுடன் வாழ்ந்து இவர்களை சுரண்டிய பாதிரியார்களுக்கும் பொருந்தும்.

மொத்தமும் வட்டார வழக்கு மொழியில் எழுதியுள்ளார். புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. போக போக புரிய ஆரம்பிக்கிறது. பல வார்த்தைகளுக்கு கதையின் போக்கில் இது தான் அர்தமாக இருக்கும் என்று எண்ணி கொள்ள வேண்டியுள்ளது. 117 வார்த்தைகளுக்கு பொருள் சொல்லியுள்ளார். அதற்கு மேலும் பல வார்த்தைகளுக்கு பொருள் விளங்கவில்லை.

குடும்ப வரைப்படம் கொடுத்துள்ளார். பல பெயர்கள் புதிதாக உள்ளது. பல பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

கடற்கரை ஊர்களின் பெயர்கள் சில கற்பனை என்றும் சில உண்மை பெயர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டார வழக்கு மொழியில் 500 பக்கங்கள் எழுதுவது மிக சிரமமான காரியம். ஒரு இன மக்களின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாக எழுதுவது என்பது மிகவும் சிரமமான சவால். அதை எதிர் கொண்டு மிகச் சிறப்பாக செய்துள்ளார்.

இன்றைக்கும் இதே போன்ற சொற்களை தான் அந்த இன மக்கள் உபயோகப்படுத்துகிறார்களா என தெரியவில்லை. நவீன தொழிழ் நுட்பம் இருக்கும் இந்த காலத்திலும் பல இன்னல்களை சந்திக்கும் இந்த இன மக்கள் அந்த காலத்தில் சந்தித்திற்க்கும் இன்னல்களை கற்பனை செய்து பார்த்தால் மிகவும் ஆச்சரிமாய் இருக்கிறது.

இனி ஒவ்வொரு முறையும் கடல் மீன் சாப்பிடும் போது இவர்களது வாழ்க்கை முறை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. நகரத்தில் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கினாலும் அதை பிடித்து வரும் மீனவர்கள் இன்னமும் ஏழ்மை நிலையில் இருப்பது தான் வருத்தமளிக்க கூடிய விசயம்.

1. St. Catharine – கித்தேரியம்மன்
2. St. Andrew – பெலவேந்திர்ர்
3. Martin – மடுத்தீன்
4. Thomas Andrew – தெம்மந்திரை
5. Ignatius – இஞ்ஞாரி
6. George -  வருவேல்
7. Paradise -  பரதேசி
8. Lucia -  பிரகாசி
9. Manuel Andrew – மனவந்திரை