Thursday 26 September 2013

சட்டங்கள்

சட்டம்::

கீழே இருப்பது முந்தைய பதிவு.இன்றைய நிலைபடி  இந்த அவசர சட்டம் வாபஸ் பெறபடும் என தெரிகிறது.

சட்டம் இயற்றப்பட்டாலும், இந்திய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.
குற்றம் நிருபீக்கப்பட்டு தண்டனை பெற்றாலும் அரசியல்வாதிகள், அவர்கள் தேர்தலில் நிற்காமல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மகன்,மருமகள், மகள், மருமகன், மனைவி, சின்ன வீடு இப்படி யாரையாவது நிறுத்தி தேர்தலில் நின்று ஜெயித்து பதவிக்கு வந்து செய்ய வேண்டிய அட்டுளியங்களை செய்துகொண்டிருப்பார்கள்.

இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. இதையாவது செய்ய முடிந்ததே என திருப்திபடவேண்டியது தான்.

குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது
அண்மையில் இந்திய உச்ச நீதி மன்றம், குற்றவியல் தண்டனை சட்டப்படி 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சிறை தண்டனை பெற்றவர்களது சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என தீர்பளித்தது. அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கவும் தடை விதித்த்து.

ஆனால், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை எதிர்த்தன. இந்த விசயத்தில் மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.
இதை தடுப்பதற்க்காக ஒரு அவசர சட்டத்தை அமுல் படுத்தவும் தயாராய் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களும், தண்டனை பெற்று மேல் முறையீடு செய்த நிலையிலும் உள்ளவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதற்கு அரசியல் கட்சிகள் கூறும் காரணங்கள் சரியானது போல தோன்றுகிறது.
1. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும், மேல் முறையீடு செய்வதன் மூலம் உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் தண்டனை ரத்து செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ சந்தர்பம் இருப்பதால், இந்த தீர்ப்பு சரியானது அல்ல என வாதாடுகிறார்கள்.
அதற்கு பதிலாக, கீழ்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்களது பதவியை பறிப்பதை விட, அவர்கள் பதவியில் இருக்கலாம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் ஆனால் அங்கு அவர்களுக்கு ஒட்டளிக்கும் உரிமையை நிறுத்தி வைக்கலாம் மற்றும் சம்பளத்தை நிறுத்தி வைக்கலாம் என வாதிடுகிறார்கள்.
இது சரியான வாதமாக தோன்றுகிறது. மேலும், ஒருவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்க்காக பொய் வழக்கு பதிவு செய்து, சாட்சியங்களை ஏற்படுத்தி, நீதியை விலைக்கு வாங்கி தண்டனை அறிவிக்க செய்தால் ஒருவர் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடும் உரிமையை இழந்து விடுவார். குறிப்பாக பாலியல் வழக்குகள் பதிவு செய்வது இன்றைய நிலையில் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மிக எளிதாக  மக்களிடையே உணர்சிகளை தூண்டிவிட்டு, நீதிமன்றங்களுக்கு நெருக்கடி கொடுத்து, தண்டனை வாங்கி தர முடியும்.
ஆனால், கீழ் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தீர்ப்பு வர 20-30 வருடங்கள் ஆகும் நிலையில், குற்றவாளிகள் ஆட்சியில் இருப்பதும், அவர்களுக்கு நாம் அடிபணிவதும் கேவலமாக தோன்றுகிறது.
அரசியல்வாதிகள் பொதுவாக குற்றவாளிகள் என்ற அபிப்பிராயம் மக்களிடையே உள்ளது. அதற்கு காரணம் ஊடகங்கள் தொலைகாட்சிகள் செய்யும் பிரசாரமமே காரணம். ஊடகங்கள் நினைத்தால் ஒருவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமலேயே , அவனுக்கு தன்டனை வழங்ககூடிய நிலையில் உள்ளன. ஊடகங்கள் பரப்பும் செய்திகளின் அடிப்படையில் தான் நாம் அபிப்பிராயத்தை உருவாக்கி கொள்கிறோம். ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே நீதிமன்ற தீர்பையும், அரசியல்வாதிகள் எழுப்பும் வாதங்களையும் கருத்தில் கொண்டு, யாருக்கும் பாதிப்பு வராமலும் அதே சமயம் குற்றவாளிகள் நம்மை ஆட்சி செய்யாமலும் இருக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும்.

எந்த சட்டம் இயற்றினாலும், ஒரு சாராருக்கு சாதகமாகவும் மறு சாராருக்கு பாதகமாகவும் முடிகிறது.
குறை சொல்ல முடியாத அளவுக்கு எந்த சட்டமும் இயற்ற முடியாது என தோன்றுகிறது.

லோக்பால் சட்டத்தை அவசரமாக சட்டமாக  இயற்ற வேண்டும் என குரல் கொடுத்தபோது, சட்டம் பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இயற்ற முடியுமே தவிர , அவசர சட்டமாக இயற்ற முடியாது என கூறிய அரசு இன்று வரை அந்த சட்டத்தை இயற்றவில்லை. ஆனால், அவர்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்தவுடன் , அவசர சட்டம் இயற்றுகிறது.

நமது ஜனநாயக ஆட்சிமுறை மீதே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

Sunday 15 September 2013

கற்பழிப்பு குற்றமும் தண்டணையும்



கற்பழிப்பு குற்றமும் தண்டனையும்::
டெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டவுடன் மகிழ்சியடைந்து இனிப்பு கொடுத்து கொண்டாடி மக்கள் நிகழ்சியை முடித்து வைத்தனர்.
ஊடகங்கள், நீதிமன்ற தீர்ப்பு நாளை நேரடி ஒளிபரப்பு செய்வதாக கூறி பின்பு சில பல விவாதங்களுடன் தங்களது கடமையை செய்து முடித்தது. அவர்களுக்கு இப்போது நரேந்திர மோதி விசயம் இருப்பதால் இதை இனிமேல் பேசமாட்டார்கள்.
ஒருசிலர் வித்தியாசமாக சொல்லவேண்டும் என்பதற்காக தூக்கு தண்டனை தேவையா என கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இந்த வழக்கு விசயத்தில் அது தேவையில்லை என கூற தைரியம் வேண்டும். அப்படி கூறினால் அவனும் இந்த குற்றத்திற்கு உடந்தை என்பது போல கருந்து வெளியிட்டு தங்களது நமைச்சலை தீர்த்து கொள்வார்கள்.
வேறுசிலர் இந்த வழக்கை இவ்வளவு சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு வழங்கியதை போல மற்ற வழக்குகள் ஏன் விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வியையும், டெல்லியில் நடந்தால் தான் முன்னுரிமையா என்றும் எங்களது மாநிலத்தில் நடந்தவைகளை ஏன் இதுபோல் விசாரிக்கவில்லை என்று அரசியல்வாதிகள் போல் கருத்து தெரிவித்துள்ளனர்.
கற்பழிப்பு நிச்சியமாக தவறான செயல். அது தண்டிக்கப்பட வேண்டிய செயல். இதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால் இந்த விசயத்தில் எல்லாம் சரியாக நடந்திருக்கிறதா என்பது தான் கேள்வி.

கற்பழிப்பு என்றால் என்ன. முதலில் கற்பு என்றால் என்ன?. பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஆண் அவளிடம் உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு என்று பொருள்படுகிறது. பெண் சம்மதித்து உடல் உறவு கொண்டால் அது கற்பழிப்பு ஆகாது. செய்கை ஒன்று தான். அதில் பெண்ணின் சம்மதத்தை பொறுத்து பொருள் மாறுபடுகிறது. கணவன் மனைவி தினமும் உறவு கொண்டாலும், மனைவி மறுக்கும் போது கணவன் கட்டாயமாக உறவு கொண்டால் அதையும் கற்பழிப்பு என்று தான் சட்டம் சொல்கிறது.. அதாவது பெண்ணின் சம்மதம் இல்லாமலும், அல்லது சடங்குகள் சம்பிராதயங்கள் இல்லாமலும் ஆண் பெண் உடல் உறவு கொண்டாலும் கற்பு போய்விட்டது என பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் உடல் உறவுதான்  கற்பு என்று பொருள் படுகிறது  அதாவது, பெண் மட்டுமே உறவை தீர்மானிக்கும் உரிமையை பெறுகிறாள்.
பெண் பலவந்தபடுத்தி ஆணை இணங்க செய்தால் அது கற்பழிப்பு குற்றத்தில் வருவதில்லை. ஆண் அதை வெளியில் சொல்வதில்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் நீ விரும்பி உடல் உறவு கொண்டாலும் அல்லது பெண் உன்னை பலவந்தம் செய்து உறவு கொண்டாலும் உனக்கு இன்பம் தானே என்று சமாதானம் சொல்கிறார்கள். பெண்ணுக்கு உறவு கொள்வதற்க்கு விருப்பம் இல்லாத போது ஆண் உறவு கொள்ளகூடாது என்றால் பெண்ணும் அப்படி தானே.  ஆண் உறவு கொள்ள மறுத்தாலும், பெண்கள் அதையும் குறை கூறி ஆணை அவமானப்படுத்துகிறார்கள். இன்பம் அடைவது இருவரும் தான். துன்பம் அடைவதும் தான் இருவரும் தான். ஆனால், ஆண் மட்டும் தான் இன்பம் அடைகிறான் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. இதை ஆண் வர்கமும் ஒப்புகொள்கிறது. நியாயம் இருவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். இருவரது சம்மதத்துடன் நடைபெற வேண்டும்.
கற்பழிப்பு என்ற நிகழ்சியில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடல் உறவு நடைபெறுவதால் அது தண்டனைக்குரிய செயலாக மாறுகிறது. அதிலும் பலர் சேர்ந்து வன்முறையுடன் உறவு கொள்வது மிகவும் தவறான செயல் .நிச்சியமாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

6 பேர் சேர்ந்து செய்த கற்பழிப்பு. ஒருவன் சிறுவன். 3 ஆண்டு தண்டனையுடன் தப்பித்துவிட்டான். ஒருவன் தூக்குமாட்டிகொண்டு செத்துவிட்டான். மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை.இந்த தண்டனை கற்பழிப்பு குற்றத்திற்க்காக மட்டுமல்ல. உயிரிழப்புக்கும் சேர்த்துதான். இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றால், இந்த தண்டனை கிடைத்திருக்க வாய்பில்லை.
18 வயது நிரம்பாதவன் என்பதற்காக குறைந்தபட்ச தண்டனை சரிதனா. இவன் உடல் உறவு மட்டும் கொள்லவில்லை. உயிர் பிரிவதற்கான காரியத்தையும் செய்துள்ளான். இரண்டு தவறுகளையும் செய்த பின்பும்  வயதின் காரணமாக கடும் தண்டனையிலிருந்து தப்பி விட்டான். சிறுவனுக்கு காமம் செய்ய தெரிகிறது, கொடுரமான முறையில் செயல்களை செய்ய தெரிகிறது . ஆனால் சிறுவன், செயலின் தன்மையை அறியாமல் செய்துவிட்டான் என்ற நியாயத்தின் கீழ் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிட்டான்.
நியாயம் வயதை பொறுத்த அல்லது குற்றத்தை பொறுத்த?. வயதை பொறுத்து என்றால் ஒருவன் 18 வயது அடையும் வரை இது போன்ற எத்தனை கற்பழிப்பு குற்றங்கள் செய்தாலும் அவண் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம். இது எப்படி நியாயம். இந்த சட்டம் உலகம் முழுவதும் இருக்கிறது.
18 வயதுக்கு உட்பட்டவன் எந்த குற்றம் செய்தாலும் இப்படி தான் தண்டனையளிக்கப்படுகிறது. கொலை குற்றத்திற்க்கும் இது தான் தண்டனை.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு 18 வயதுக்கு உட்பட்ட சகோதரன் இருந்து, குற்றம் செய்தவர்களை பழி வாங்குவதற்க்கு  அவர்களை கொலை செய்தால், சட்டம் என்ன செய்யும். அவனையும் சிறுவன் என்று கருதி அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைதண்டனை தானே தரும். ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வழக்கை நடத்தி  தண்டனை வாங்கி தரவேண்டும். இந்த தண்டனை நிறைவேற்றப்பட பல ஆண்டுகள் ஆகும். தண்டனை குறைக்கப்படவும் வாய்புண்டு. இந்த குற்றத்திற்க்கு மரண தண்டனை தான் சரியானது என்றால், அதை பாதிக்கப்பட்டவர்கள் செய்ய என்ன தடை. அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க என்ன பிரச்சனை.
இந்த வயது வரம்பை வைத்து தான் தண்டனை என்றால், பழிவாங்க நேரடியாக கொலை செய்பவர்களும்,  கூலிபடையை வைத்து கொலை செய்பவர்கள் ஏன் 18 வயதுக்கு உட்பட்டவர்களை வைத்து கொலை செய்யமாட்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவண் வசதியான வாழ்க்கை வாழலாம்.
இப்படி அனுமதிக்கபட்டால், சமுதாயத்தில் அமைதி இருக்காது.
எனவே , இந்த பாலியல் குற்றத்திற்க்கு அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறானது. மரண தண்டனை வழங்கவில்லையென்றாலும் ,ஆயுள் தண்டனையாவது வழங்கியிருக்கலாம்.
சட்டப்படி தான் சிறுவனுக்கு தண்டணை வழங்கபட்டது சரியென வாதாடினால், மற்ற 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டணை சரியானதா.?
நமது சட்டத்தில் கற்பழிப்பு குற்றத்திற்க்கு மரண தண்டனை கிடையாது. எந்த குற்றத்திற்க்கும் மரண தண்டனை கூடாது என்ற விவாதமும் இருக்கிறது.
இந்த 4 பேர் கற்பழிப்பு குற்றம் மட்டுமே செய்துள்ளார்கள். சட்ட்த்தின் படி இவர்களுக்கு மரண தண்டனை பொருந்தாது. எது அதிக பட்ச தண்டனையென்று நிர்ணயிக்கபட்டுள்ளதோ அதை தான் வழங்கியிருக்க வேண்டும்.
பழிக்கு பழி உயிருக்கு உயிர் பழிவாங்கபடும் என்பது என்ன நியாயம். இது சட்டமா. காட்டுமிராண்டிதனமா ?
மேலும், ஒரு உயிரிழப்புக்கு, 4 உயிரை பறிப்பது சரியா.? இது மறுபரிசீலனை செய்ய வேண்டிய தீர்ப்பு.
ஏன் இவ்வளவு அவசரமாக வழக்கு முடிக்கப்பட்டது. தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் இதை பெரிது படுத்தின. அந்த சமயத்தில் அவர்களுக்கு ஒளிபரப்புவதற்க்கு வேறு செய்திகள் இல்லை. மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையின் உண்ர்சிகள் தூண்டிவிடப்பட்டது. அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. புதிய சட்டம் இயற்றவும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. மக்களை சமாதனபடுத்த வேண்டிய நிலையில் அரசும் இதை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதே காரணத்திற்காக தான், நீதீ மன்றமும் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்திற்க்கு தெரியும். எப்படியும் மேல் முறையீடு செய்யப்படும். மற்ற நீதிமன்றங்கள் இறுதி தீர்ப்பு கொடுக்கட்டும். நாம் மக்களின் கோபத்திற்க்கு ஆளாகமல், நமது இடத்திலிருந்து இந்த வழக்கு விலகி செல்லட்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே இந்த நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.இதை தான் குற்றவாளிகளின் சார்பாக வாதாடிய வழக்கறிங்கரும் கூறியுள்ளார். இதற்காக அவர் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளார்.
அப்துல் கசாப் வழக்கில் எத்தனை ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட்து. அவண் செய்தது ஒரு கொலையா இல்லையே. பல கொலைகள் செய்தான். அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு அவனுக்காக வாதட வாய்பும் அளிக்கப்பட்ட்து.
பல கொலைகள் செய்தவனுக்கு ஒரு மரண தண்டனை. ஆனால் ஒரு கொலைக்கு 4 பேருக்கு மரண தண்டனை. அப்துல் கசாப்பை எத்தனை முறை தூக்கிலிடவேண்டும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் யோசித்து பாருங்கள்.
இதுதான் நியாயமா. இதுதான் தர்மமா. இதற்கு சட்டமும் நீதிமன்றங்களும் தேவையா.
பின்பு என்ன தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆயுள் தண்டனை வழங்கியிருக்கவேண்டும். ஆயுள் தண்டனையென்றால் சட்டம் சொல்லும் 14 வருட தண்டனையல்ல. அவண் உயிரோடு இருக்குவரை சிறையில் இருக்கவேண்டும். மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றினாலும் அத்துடன் கதை முடிந்துவிடுகிறது. அப்படியில்லாமல் செய்த குற்றத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டும். எந்த இன்பத்திற்காக இந்த குற்றத்தை செய்தானோ அந்த இன்பம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காமல், ஏங்கி ஏங்கி வருத்தப்பட்டு உயிரிழக்கவேண்டும்.
இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் மரண தண்டனை கூடாது.
மரண தண்டனைதான் சரியானது என்று சொல்லும் மக்களிடம் நான் கேட்கும் இரண்டு கேள்வி.
1)இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல்வாதியின் மகனாகவோ அல்லது பெரிய பணகாரரின் மகனாகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
நண்பன் என்கிற காதலன் சாட்சியம் அளித்திருக்கமாட்டான். விலை பேசப்பட்டிருப்பான். நீதியும் விலை பேசபட்டிருக்கும். அப்படியே விலைக்கு அவர்கள் வரவில்லையென்றால், சாட்சியத்திற்க்கு விபத்து ஏற்பட்டு உயிர் இழந்திருப்பார். நீதி உறங்கியிருக்கும்.
2) விதி வசத்தால்,விதி வசத்தால் (அப்படி யாருக்கும் நேரவேண்டாம்) தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஆண்/பெண்ணின் தந்தையோ, கணவனோ, மகனோ, சகோதரணோ இந்த மாதிரி குற்றத்தை செய்திருந்தால், மரண தண்டனை கொடுங்கள் என்று கூறுவார்களா ? மாட்டார்கள். என் உறவு இது போன்ற குற்றங்களை செய்யவில்லை என்பார்கள். செய்ய மாட்டான் என்பார்கள்.அவனது கூட்டாளிகள் சிக்க வைத்து விட்டார்கள் என்பார்கள். சிறந்த வக்கீலை பார்த்து வாதாடுவார்கள். சாட்சியிடம் கெஞ்சுவார்கள். மிரட்டுவார்கள். தண்டனையை கருனையுடன் பரிசீலித்து குறைந்தபட்ச தண்டணை வழங்க வேண்டுவார்கள்.காரணம் அது அவர்களது உறவு.

இப்போது தண்டனை பெற்றவர்களின் உறவுகளுக்கும் அப்படிதான் இருக்கும். அவர்களும் குற்றம் செய்தவர்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.
எனவே யாராக இருந்தாலும் இந்த இரட்டை வேடம் போடதான் செய்வார்கள். எனவே மரண தண்டனை அவசியமா என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். எல்லோரும் உணர்ச்சி வேகத்தில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தான் கூறுவோம். சற்று யோசித்து முடிவுசெய்தால் உங்கள் எண்ணங்கள் மாறக்கூடும்.

இறுதியாக, உடன் இருந்த நண்பனின்/காதலனின் இன்றைய மனநிலை என்னாவாய்யிருக்கும். அவனால் இந்த நிகழ்சியை மறக்கமுடியாது. காலபோக்கில் அவண் திருமணம் செய்துகொண்டு, மணைவியுடன் உடல் உறவு கொள்ளும் போது இந்த நிகழ்ச்கி நினைவுக்கு வரும். நாம் இயற்கையான உறவு கொள்கிறோமா அல்லது பாலியல் பலாத்காரம் செய்கிறோமா என மனஉளைச்சல் ஏற்படும்.
அவனுக்கு ஆறுதல் சொல்லி அறிவுரை கூறி நல்ல மனநிலைக்கு திரும்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிமன்றமும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

இந்த நிகழ்சி நடந்த பின்பும்  பல கற்பழிப்பு நிகழ்சிகள் இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இனிமேலும் நடக்கும்.
ஆண்களே திருந்துங்கள் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். உங்களுக்கு காமம்  தேவைப்பட்டால், விலைமாந்தரிடம் செல்லுங்கள். அப்பாவியான பெண்களை துன்புறுத்தாதீர்கள்
பாதிக்கப்பட்ட பெண் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்பு தேவைப்பட்டால் மீண்டும் எனது கருத்துகளை கூறுகிறேன்
.









Saturday 14 September 2013

பிள்ளையார்


கடவுள் வழிபாடு::


நான் பிள்ளையார் சதுர்த்தி அன்று அவரைபபற்றி ஒரு பதிவும் பாட்டும் போட்டேன். கடவுள் என்றால் என்ன என்பதும் ஏன் இப்படி என்பதும் தான் கேள்வியாக்கினேன்.

என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் கடவுளை குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம், எழுத வேண்டாம் என்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படியும், மேலும் கடவுள் தண்டிப்பார் என்றும் அறிவுரை கூறினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

கடவுளை நான் நிந்திக்கவில்லை. கடவுளை பற்றி சிந்திக்கிறேன். ஆத்திகன் என்று சொல்லும் நபர்களைவிட , நாத்திகன் என்று குறிப்பிடபடும் நான் உயர்ந்தவன்.

ஆத்திகன் என்று சொல்லிகொள்பவர்கள், விஷேச தினங்களிலும் மற்றும் தங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்கிற போதும் அல்லது தங்களுக்கு நேரும் துன்பங்களின் போதும் மட்டுமே கடவுளை நினைக்கிறார்கள்.

மேலும், எனது துனபத்தை நீக்கினால், அல்லது எனக்கு இதை அதை கிடைக்க செய்தால்  நான் உனக்காக இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று பேரம் பேசுகிறார்கள். மொட்டை அடித்து கொள்கிறேன் என்று பிராத்தனை செய்கிறார்கள். மயிர் வளர்ந்து விடும் என்பதால் அதை இழக்க தயாராக இருக்கிறார்கள். ஏன் கையை காலை வெட்டிகொள்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே அல்லது இருக்கும் சொத்தில் பாதியை தானம் செய்கிறேன் என்று வேண்டிகொள்வது தானே.

நான் முன்பு எல்லோரையும் போல கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். பின்பு சிந்தித்து பார்க்கும் போது, கடவுளும் , புஜை முறைகளும் மக்களை நல்வழிபடுத்துவதற்க்காகவும் , மக்கள் பிறருக்கு துன்பம் இழைக்காமல் இருப்பதற்க்காகவும், பயமுறுத்தி  ஏற்படுத்தப்பட்ட முறை என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒரு சாரர் அதை தங்களுக்கான பிழைப்பாக வைத்துகொண்டு அநியாயம் செய்வதை உணர்ந்துகொண்டேன். கடவுளை வணங்குவதற்க்கு கூட பல நிபந்தனைகள், முன் உரிமைகள் மற்றும் கடவுளின் இடைதரகர்களாக இருப்பவர்கள் செய்யும் அடாவடி தனங்கள்
இவற்றை உணர்ந்த பிறகு கடவுளின் மேல் நம்பிக்கையும் பயமும் போய்விட்டது.

அதனால் தான் கடவுளை பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று அறிந்து கொண்டு, சிந்தித்து பல கேள்விகளை எழுப்பி கேலி செய்கிறேன்.இதனால் கடவுளை பற்றி அதிகம் படிக்கிறேன். தினமும் கடவுளை நினைக்கிறேன்.

நான் நல்லவன். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. எதையும் கடவுளிடம் கேட்பதில்லை. பேரம் பேசுவதில்லை. எப்படியிருப்பினும் நான் கடவுளை பற்றி நினைப்பதால், அவர் எனக்கு நல்லது தான் செய்வார்.(கடவுள் என்று ஒருவர் இருந்தால்)

நான் தினமும் பலமுறை சொல்வது: அப்பனே முருகா ஷண்முகா, ஞ்னா பண்டிதா வேலாயுதா கந்தா கடம்பா கதிர்வேலா என்னை மட்டும் காப்பாத்து அல்லது என்னை என் பொண்டாட்டியிடமிருந்த காப்பாத்து என்று சொல்லிகொண்டேயிருப்பேன்.

எனவே ஆத்திகனை விட நாத்திகன் என்று சொல்லப்படும் நான் கடவுள் என்று சொல்லபடுபவன்  பெயரை அதிகம் சொல்கிறேன்.

கடவுளை எதிர்கிறேன் என்பதை விட , அவனது பெயரால் செய்யப்படும் அநியாயங்களை எதிர்கிறேன். அப்போது கடவுள் என்று சொல்லப்படுகிறவனையும் எதிர்கிறேன்.

கடவுளுக்கு ஏன் இத்தனை உருவ வழிபாடு. எத்தனை வேறுபாடுகள். எத்தனை பிரச்சனைகள். எனவே அவனிடமிருந்து விலகியிருப்பதே மேலானது என முடிவு செய்துவிட்டேன்.

இதற்கு மேலும் எனக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்பங்கள் ஏற்பட்டால், அது இயற்கையான நிகழ்வுகளாகவே இருக்கும். அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தை அனுபவிக்கிறோம் என்று சொல்வார்களே அதுவாக தான் இருக்கும். எனது கடவுள் நிந்தனைக்காக இருக்காது.

எதற்கு இத்தனை கடவுள்கள்.கோயில்கள்.பிரச்சனைகள்.

உணரகூடிய நிலையில் உள்ள ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் இயற்கையை வணங்கினால் போதாதா. ஒரு செங்கல்லை வணங்கினாலும் போதுமானது.

நிலம்.நீர்,வாயு, ஆகாயம், நெருப்பு -களிமண்ணை எடுத்து நீர் கலந்து, நெருப்பில் சுட்டு, காற்றில் காய வைத்து, ஆகாயத்தை கூறையாக வைத்து ஒரு செங்கல்லை வைத்து கும்பிட்டாலும் அதுவும் கடவுள் தான்.
எந்த வித நோன்பும் விரதமும், கொடுக்கல் வாங்கல் இல்லாமல் நமது மனசுமையை இறக்கி வைக்கும்  சுமைதாங்கியாய் பயன்படுத்தலாம்.
மற்றவை எல்லாம் வெளிவேசமே.

ஒரு கோவில் கட்டுவதற்க்காக இரு மதங்கள் சண்டையிட்டுகொள்கின்றன. எத்தனை மனித உயிரிழப்பு. எத்தனை சொத்துக்கள் நாசம். எத்தனை குடும்பங்கள் அனாதையாகின்றன.
இரு மதங்களையும் சார்ந்த கடவுள் ஏன் அதை தடுப்பதில்லை. தண்டிப்பதில்லை.
கடவுள், கோயில், பண்டிகை இன்ன பிற விசயங்களை பற்றி என்னுடன் பேசும் போதும், என்னை கடவுளை நம்பு என்று வற்புறுத்தும் போதும் எனது கடவுள் நிந்தனை தொடரும்.

எனது வீட்டில் புசை மடம் இருக்கிறது.முருகன் சிலையும் இன்ன பிற சிலைகளும் கடவுள் படமும் உண்டு. என் மனைவி தினமும் சாமி கும்பிடுவாள். எனது பிள்ளைகளையும் கும்பிட சொல்வேன். எனக்கு நம்பிக்கை இல்லையென்பதற்காக மற்றவர்கள் நம்பிக்கையை கெடுப்பதில்லை. அதே சமயம் எனது கடவுளுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிகொண்டேயிருப்பேன்.

நவராத்திரி தீபாவளி வருகிறது . அந்த கடவுள்களை பற்றி எழுத வாய்புள்ளது

வணிகம்-BUSINESS


RELIANCE NEW INVESTMENT- ரிலையென்ஸ் புதிய மூதலீடு



ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில், ரூ.63,400 கோடி ($ 10 billion )முதலீடு செய்து, சேல்(shale gas) வாயு நிறுவன சொத்துக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரூ.38674 ($ 6.1 billion) முதலீடு செய்துள்ளது. மீதமுள்ள ரூ.25360 கோடிகளை ($3.9 billion) முதலீடு செய்ய உள்ளது.. ரிலையன்ஸீடம் ஏற்கனவே ரூ.85000 கோடி உபரியாக உள்ளது. அந்த பணத்தின் மூலம் இதை வாங்க போகிறது.

அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களின் மூலம், சேல்(SHALE) வாயு உற்பத்தி செய்து, அமெரிக்காவில் வாயு அடிப்படையாக கொண்ட,(GAS BASED FERTILIZERS, PETRO CHEMICALS AND POWER PLANT தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிறகு அவைகளை இந்தியா கொண்டுவர உள்ளது. மேலும், விலை குறைவான சேல் வாயுவை(SHALE GAS) இந்தியாவிற்க்கு கொண்டுவந்து, விலை அதிகமான (LNG) மாற்றி விற்க முடிவு செய்துள்ளது.

ஒரு இந்திய நிறுவனம், உலக நிறுவனங்களுக்கு இனையாக தொழில் செய்வது பெருமைபடகூடிய விசயம். இந்த நிறுவனத்திற்க்கு சேவை செய்யும் விதமாக பல சிறிய நிறுவனங்கள் உருவாகும். நிறைய வேலை வாய்புகள் உண்டாகும் இந்த நிறுவனம் நிறைய லாபம் சம்பாதிக்கும். சரி இதில் என்ன பிரச்சனை. ஏன் இந்த பதிவு.

ரிலையன்ஸ் மூதலீடு ரூ.63400 கோடி ($ 10 billion) இந்திய அரசின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவானி( அமெரிக்கன் டாலர்) வெளியே போகிறது.
அமெரிக்காவில் இருக்கும்  ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு அமெரிக்காவில் தயாரான பொருட்களை விற்கும் போது, இந்திய நிறுவனம் அந்நிய செலவாணி கொடுத்து தான் வாங்கும்.
அதாவது, மூதலீடு செய்யும் போதும், அங்கு தயாரன பொருட்களை திரும்ப கொண்டுவரும் போதும் நாட்டின் அந்நிய செலவானியை இரண்டு முறை உபயோகப்படுத்துகிறது. இந்திய நிறுவனம்  வெளிநாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் இரட்டிப்பு அந்நிய செலவாணி செலவாகிறது. இந்த தொழிலின் மூலம் அந்நிய செலவானி நம் நாட்டுக்கு வரவில்லை.

இதே தொழிலை இந்தியாவில் கிடைக்கும் கனிமங்களை கொண்டு செய்தால், அந்நிய செலவானி மிச்சமாகிறது. மேலும் நமக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ( கச்சா எண்ணெயில் செய்யும் அடாவடி தனத்தை செய்யாமல் இருந்தால்(எனது முந்தைய பதிவை படிக்கவும்)

இதற்காக தான் தஞ்சாவூர் பகுதியில், மீத்தேன் வாயு கிடைப்பதால், அங்கு அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால், விளைநிலங்கள் பாழகிவிடும் மற்றும் தானிய உற்பத்தி குறைந்து விடும் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள நிலசீர்திருத்த சட்ட்த்தின் மூலம் , நில உரிமையாளர்களில் 80% பேர் ஒப்புகொண்டால் தான் நிலத்தை கையகபடுத்தமுடியும். எனவே எதிர்ப்பு இருப்பதால், நிலத்தை கையகபடுத்த முடியாது . தொழிற்சாலை தொடங்க இயலாது.

ஆனால், புதிய நிலசீர்திருத்த சட்டத்தின்படி, நிலங்களுக்கு நட்ட ஈடாக , அந்த இடத்தின் சந்தை விலையை போல 4 மடங்கு தர வேண்டும் என்றும் மேலும் பலபல  சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆசைபட்டு, விவசாயிகள் நிலங்களை விற்க ஆசைபடலாம்.
இந்த சட்டம் இயற்றியதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாரட்டவுமில்லை.

அரசு எந்த கொள்கை வகுத்தாலும் , பொதுவாக பணக்கார்ர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாகவே கூறுவார்கள். எதிர்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடுவதாக ஒருநாள் ஊர்வலம், கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை காட்டி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக செயல்படுவதாக காட்டிகொள்வார்கள். ஆனால், அரசு சட்டத்தை கொண்டுவர உதவியும் செய்வார்கள்.
இது போன்ற தொழிற்சாலைகள் தொடங்கபடும் இடங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் லட்சகணக்கில் பணத்தை பட்டுவாடா செய்கின்றன. இவர்கள் பொதுமக்களின் துணையுடன் பிரச்சனை செய்யாமல் இருப்பதற்க்கும் அல்லது பொதுமக்களோ அல்லது தனியார் அமைப்புகளோ தொல்லை கொடுத்தால் அதை அவர்கள் சமாளிப்பதற்க்கும் கொடுக்கப்படுகிறது.

சேல் என்பது என்ன?
இறுக்கப்பட்ட சேறு , களிமண் மற்றும் வேதியல் பொருள்களால் ஆன பாறை. (Shale is a compressed fine-grained type of sedimentary rock. It was formed from mud silt, clay, and organic matter).
சேல் வாய் என்பது என்ன?  சேல் பாறைகளில் இருக்கும் வாயு. இது HYDROCABON வாயு கலவை. இதில் அதிகமாக METHANE வாயு அடங்கியுள்ளது.மேலும், ETHANE, PROPANE , BUTANE, CAROBON DIOXIDE, NITROGEN)AND SULFIDE அடங்கியுள்ளது.
Shale gas is natural gas trapped within tiny pore spaces in shale formations. It is a hydrocarbon gas mixture. It consists mainly of methane. Other hydrocarbons are natural gas liquids (NGLs) like ethane, propane, and butane, and it also contains carbon dioxide, nitrogen, and hydrogen sulfide.
LNG என்றால் என்ன?
நிறமற்ற திரவநிலையில் இருக்கும் இயற்கை வாயு
இது மின்சார உற்பத்திக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இராசயன பொருட்கள் தாயரிப்பதற்க்கும் பயன்படும்

LNG is liquefied natural gas, a clear, colourless, non-toxic liquid that forms when natural gas is cooled to -162ºC (-260ºF). This shrinks the volume of the gas 600 times, making it easier to store and ship to energy-hungry towns and cities overseas.
 

 RELIANCE CRUDE OIL BUSINESS-ரிலையஸ் கச்சா எண்ணெய் வியாபாரம்


ரிலையன்ஸ் நிறுவனம் கடலோர பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது என்பது தெரிந்த விசயம்.

இப்போது அரசுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கும் நடக்கும் பிரச்சனைகள்.

அரசு தரப்பு::
1. ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி தொடங்காத்தால், 100 கோடி            ($ 1 billion) அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே அபராதம் விதித்துள்ளது.மேலும், தற்போது, 797 லட்சம்( $ 797 million) அமெரிக்க டால்ர்கள் அபராதம் விதித்துள்ளது.
2. ஏற்கனவே உற்பத்தி செய்யும் இடங்களில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க முடியாது என அமைச்சகம் கூறுகிறது.
3. கால தாமதம் செய்வதால் புதிதாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8 இடங்களை அரசுவசம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சகம் கூறுகிறது
4. சில இடங்களில் மட்டுமே உற்பத்தி செய்கிறது அதுவும் குறைவாக செய்கிறது என்பது அரசின் குற்றசாட்டு.

ரிலையன்ஸ் வாதம்::

1. எண்ணெய் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஒப்பந்தபடி சந்தை விலை கொடுக்க வேண்டும்.
2.அரசு ஒப்பந்தத்தை மீறுகிறது என குற்றம் சாட்டுகிறது.
3. 8 எண்ணெய் கிணறுகளை அரசு ஒப்படைக சொல்லுவதை கோபத்துடன் மறுக்கிறது.
4. இப்படிபட்ட சூழ்நிலையில், முதளிட்டாளர்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய மாட்டார்கள் என கூறுகிறது.
5. சந்தை விலை நிர்ணயிக்கமுடியாது என கூறுவதை எதிர்கிறது.
6. அரசு எங்களிடமிருந்து ஒரு பகுதியை திரும்ப எடுத்துகொண்டு , மீண்டும் ஏலம் விட முறச்சி செய்கிறது.
7.கனிம வள சிக்கல்களினால் (geological complexity) உற்பத்தி குறைவாக உள்ளதாக கூறுகிறது.


தனியார் தொழில் தொடங்கினால், அவர்கள் தங்களது லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். தேச நலனை கருத்தில் கொள்வதில்லை.

அரசு பொதுதுறை நிற்வனங்களை தொடங்குவதில்லை. ஏற்கனவே இருக்கும பொதுதுறை நிறுவனங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை.இதற்கு அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டும் காரணமல்ல. அங்கு வேலை செய்யும் தொழிலார்களும் பொதுமக்களும் கூட காரணம். பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு அரசு விற்பனைசெய்கிறது. பொது துறை நிறுவனங்கள் சரிபட செயல்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

அரசும் ரிலையன்ஸ் நிறுவனமும் பேசி ஒரு முடிவுக்கு வந்தால், அதிக உற்பத்தி தொடங்கும். அந்நிய செலவானி மிச்சமாகும். எண்ணெய் விலை குறைந்தால் அனைத்து பொருள்களின் விலையும் குறையும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். பொருளாதரம் மேம்படும்.

விரைவில் தீரவு காண்பார்கள் என எதிர்பார்ப்போம்.
நான் தமிழில் பதிவிடுவதற்க்கு காரணம்தமிழ் மட்டுமே எழுத படிக்க பேசகின்ற மக்களும் எனது பதிவின் விவரங்கள் அறியவேண்டுமென்பதற்க்காக.
என் பதிவில் கருத்து பதிய விரும்பும் நபர்களும் தமிழில் கருத்துக்களை பதிவு செய்யவும்.
ஆங்கிலத்தில் கருத்துகளை பதிவில் செய்ய விரும்பினால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .தமிழை ஆங்கிலத்தில் எழுதுபவர்களின கருத்துக்களை நான் படிப்பதில்லை.

அதே சமயம் தமிழின் பழைய பெருமைகளை பேசி திரிபவன் அல்ல. தமிழன் அவமானப்படுத்தபடுகிறான் என்று புலம்புபவனும் அல்ல. தமிழர்களுக்கு தனி தமிழ் நாடு வேண்டும் என்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பவனும் அல்ல.